திருச்சியில் மீன் வியாபாரி வெட்டிக் கொலை
திருச்சியில் மீன் வியாபாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை காலை மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
திருச்சியில் மீன் வியாபாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை காலை மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், திருநகர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் ராமராஜ் (26). மீன் வியாபாரியான இவர் திருச்சி உறையூர் காசி விளங்கி மீன் மார்க்கெட்டில் மீன் கொள்முதல் செய்து பெரம்பலூரில் விற்பனை செய்வது வழக்கம். இன்று காலை அவர் திருச்சி உறையூர் அருகே, குழுமணி சாலையில் உள்ள, மாநகராட்சி, காசி விளங்கி மீன் சந்தையில் மீன் கொள்முதல் செய்வதற்காக தனது நண்பர்கள் 4 பேருடன் ஒரு காரில் வந்து இறங்கியுள்ளார்.
பின்னர் சந்தைக்குள் நுழையும் போது அங்கு 2 இருசக்கர வாகனங்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ராமராஜன் சுற்றி வளைத்தது. அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் ராமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கு மீன் வாங்க வந்திருந்த பொதுமக்கள் இந்த சம்பவத்தை கண்டு அலறி ஓடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமராஜ் உடலை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ராமராஜ் மீது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகவும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பழிக்கு பழியாக அவரை கொன்று இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர். தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.