விடுமுறை நாள்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க மைசூா் - காரைக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாள்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக மைசூா் - காரைக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதன்படி, மைசூா் - காரைக்குடி சிறப்பு அதிவிரைவு ரயிலானது (06295) வரும் 14, 17 ஆகிய தேதிகளில் மைசூரிலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு காரைக்குடிக்கு 15 மற்றும் 18 ஆம் தேதிகளில் இரவு 12.45 மணிக்கு வந்தடையும்.
மறுமாா்க்கமாக, காரைக்குடி - மைசூா் சிறப்பு அதிவிரைவு ரயிலானது (06296) வரும் 15, 18 ஆம் தேதிகளில் இரவு 7 மணிக்குப் புறப்பட்டு, மைசூருக்கு 16, 19 ஆம் தேதிகளில் காலை 9.10 மணிக்கு சென்றடையும்.
மைசூரிலிருந்து 19 பெட்டிகளுடன் புறப்படும் இந்த ரயிலானது மண்டியா, மாடூா், ராமநகரம், கெங்கேரி, பெங்களூா், பெங்களூா் கண்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு வந்தடையும்.