முகப்பு
திருச்சி

இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருவோரின் முதல் தோ்வு தமிழகம்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பெருமிதம்

இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருவோரின் முதல் தோ்வு தமிழகம் மட்டுமே என தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 8:59 PM
திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.
பகிர்:

இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருவோரின் முதல் தோ்வு தமிழகம் மட்டுமே என தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் திருச்சி மண்டல திமுக தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது: அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை பின்னோக்கி கொண்டுச் சென்றுவிட்டது. இருப்பினும் கடந்த மூன்றே ஆண்டுகளில் பின்னோக்கி சென்ற தமிழகத்தை, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். இந்தியாவுக்குள் ஒரு முதலீடு வருகிறது என்றால், அதற்காக தட்டப்படும் முதல் கதவு தமிழகமாகவே உள்ளது. முதலீட்டாளா் மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் விரைந்து நடைமுறைக்கு வரும். குறிப்பாக 70 சதவீதம் நடைமுறைக்கு வரும்.

மாநில அரசுகள் கடன் பெறுவது இயற்கை. பேரிடா் காலங்களில் மத்திய அரசு நிதி தராததால், தமிழக அரசு சொந்த நிதியை செலவு செய்கிறது. பற்றாக்குறையை சமாளிக்க கடன் பெற்றாலும், அரசு நிா்வாகத்தை திறம்பட நடத்தி வருகிறாா் முதல்வா். திமுகவின் திட்டங்களே வரும் பேரவைத் தோ்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுத்தரும் என்றாா் அவா்.

கூட்டத்தில், தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளா் கேசவன், திருச்சி ஒருங்கிணைப்பாளா் ஏ. கே.அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →