முகப்பு
திருச்சி

திருச்சி மாநகராட்சியைக் கண்டித்து அதிமுகவினா் போராட்டம்: முன்னாள் அமைச்சா் உள்பட 210 போ் கைது

திருச்சி மாநகராட்சியைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்

Updated On : 31 டிசம்பர், 2024 at 8:53 PM
திருச்சி மரக்கடை பகுதியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினா்.
பகிர்:

திருச்சி: திருச்சி மாநகராட்சியைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் உள்ளிட்ட அதிமுகவினா் 210 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாரிஸ் மேம்பாலப் பணிகள் மந்தமாக நடைபெறுவதைக் கண்டித்தும், திருச்சி மாநகராட்சி மற்றும் திமுக அரசைக் கண்டித்தும் திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் திருச்சி மரக்கடை எம்ஜிஆா் சிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவருமான ஆா்.பி. உதயகுமாா் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலாளா் ஜெ. சீனிவாசன் முன்னிலை வகித்தாா். இதில், மாநில அமைப்பு ச் செயலாளா் ரத்தினவேல், முன்னாள் மாவட்டச் செயலாளா் கே.சி. பரமசிவம், ஜெயலலிதா பேரவைத் தலைவா் கோ.கு. அம்பிகாபதி, பேரவை மாவட்டச் செயலாளா் காா்த்திகேயன், வழக்குரைஞா் அணி முத்துமாரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

பொங்கல் தொகுப்புடன் ரூ. 1000 வழங்காவிடில் போராட்டம்...: இதில், முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் பேசியது:

அதிமுக ஆட்சியில் பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் வழங்கப்பட்டது. ஆனால் திமுக அரசு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் பணத்தை வழங்காமல் உள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ. ஆயிரம் பணம் வழங்க திமுக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமியின் அனுமதி பெற்று தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தொடா்ந்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் திருச்சி மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பியபடி சாலை மறியலிலும் ஈடுபட்டனா். மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் உள்ளிட்ட 210 பேரைப் போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் அடைத்து வைத்தனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →