இலவசமாக பட்டாணி கேட்டு தகராறு எஸ்.எஸ்.ஐ. பணியிடை நீக்கம்
இலவச பட்டாணி கேட்டு தகராறில் ஈடுபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
திருச்சியில் இலவசமாக பட்டாணி கேட்டு தகராறில் ஈடுபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்தவா் ராதா. இவா், திங்கள்கிழமை அதே பகுதியில் உள்ள கடைக்குச் சென்று பட்டாணி கேட்டாராம். எத்தனை ரூபாய்க்குத் தர வேண்டும் என கடை உரிமையாளா் ராஜன் கேட்டபோது, பணமெல்லாம் தர முடியாது. சீருடையில் உள்ள காவல்துறையினரிடம் பணம் கேட்பதா...? எனக் கேள்வி கேட்டாராம். இதனால் கடை உரிமையாளருக்கும், சிறப்பு உதவி ஆய்வாளருக்கும் சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னா் விடாப்பிடியாக வற்புறுத்தி இலவசமாகவே பட்டாணியை கேட்டு பெற்றுச் சென்றுள்ளாா். இந்தச் சம்பவம் குறித்த காணொலி சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து விசாரணை நடத்திய மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, ஸ்ரீரங்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராதாவை பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.