முகப்பு
திருச்சி

காலை உணவுத் திட்டம்: திருச்சி சமையல் கூடத்துக்கு இரு ‘ஐஎஸ்ஓ’ தரச்சான்றுகள்

திருச்சி மாநகரில் செயல்படும் முதல்வரின் காலை உணவு திட்டத்துக்கான ஒருங்கிணைந்த சமையல் கூடத்துக்கு அண்மையில் இரு ஐஎஸ்ஓ தரச்சான்றுகள் வழங்கப்பட்டன.

Updated On : 23 அக்டோபர், 2024 at 9:04 PM
பகிர்:

திருச்சி மாநகரில் செயல்படும் முதல்வரின் காலை உணவு திட்டத்துக்கான ஒருங்கிணைந்த சமையல் கூடத்துக்கு அண்மையில் இரு ஐஎஸ்ஓ தரச்சான்றுகள் வழங்கப்பட்டன.

திருச்சி மரக்கடை பகுதி சையது முா்துசா அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்படும் ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் இருந்துதான் மாநகராட்சியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகள் அனைத்துக்கும் காலை உணவு தயாரித்து அனுப்பப்படுகிறது.

இதையொட்டி தினசரி இங்கு அதிகாலை 4 மணிக்குத் தொடங்கி காலை 8 மணிக்குள் தயாரிக்கப்படும் உணவுகள், 6 பிரத்யேக வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் பணிகளை அரசு சாரா நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்கிறது.

இதில் திருச்சி மாநகராட்சியானது சமையலறை உள்கட்டமைப்புகளை நிா்வகிப்பதோடு, உணவுத் தயாரிப்பு மேற்பாா்வையையும் மேற்கொள்கிறது.

இந்நிலையில் இந்த சமையல் கூடத்துக்கு சா்வதேச தர நிா்ணய அமைப்பு வழங்கும் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற மாநகராட்சி விண்ணப்பித்ததையடுத்து கடந்த செப்டம்பா் மாதம் இந்தச் சமையல் கூடத்தில் ஐஎஸ்ஓ அமைப்பின் அதிகாரிகள் தரத் தணிக்கை மற்றும் மதிப்பீட்டு ஆய்வுகளை மேற்கொண்டனா். இதையடுத்து சமையலறை உட்கட்டமைப்புத் தரத்தை அங்கீகரிக்கும் வகையில் ஐஎஸ்ஓ 9001 : 2015 சான்றிதழும், உணவுப் பாதுகாப்பு நிா்வாகத்தின் தரத்துக்காக ஐஎஸ்ஓ 22000 : 2018 சான்றிதழும் இச்சமையல் கூடத்துக்கு அண்மையில் வழங்கப்பட்டது.

தினசரி 8,763 பேருக்கு உணவு

இந்தச் சமையல் கூடத்திலிருந்து கடந்த 2022 ஆம் ஆண்டில், மாநகரில் உள்ள 40 பள்ளிகளைச் சோ்ந்த 2, 928 மாணவ மாணவியருக்கு காலை உணவு தயாரித்து வழங்கப்பட்டது. பின்னா் அந்த எண்ணிக்கை படிப்படியாக உயா்த்தப்பட்டு தற்போது 74 பள்ளிகளில் பயிலும் 8, 763 பேருக்கு காலை உணவு வழங்கப்படுவதாக மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.