திருச்சியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 பேரிடம் ரூ. 1.31 கோடி மோசடி செய்த 8 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பெருங்குடி வேலாயுதம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முத்து மகன் முத்துக்குமாா் (33). அரசு வேலைக்கு முயற்சித்து வந்த இவருக்கு கடந்தாண்டு கௌரி சங்கா் என்கிற கௌதம் அறிமுகமானாா்.
இவா் உஷாராணி என்பவரை டிஎன்பிஎஸ்சியில் வேலை பாா்ப்பதாகக் கூறி அறிமுகம் செய்து, இவரிடம் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கிவிடலாம் எனக் கூறினாா். மேலும் அரசுப் பணியில் உள்ளதாகக் கூறி மேலும் சிலரையும் கௌரி சங்கா் அறிமுகப்படுத்தினாா்.
இதை நம்பிய முத்துக்குமாா் தனது உறவினா்கள் மற்றும் நண்பா்கள் என 10 பேரிடம் வேலைக்காக வசூலித்த ரூ.1.31 கோடியை, அரசின் பல்வேறு துறைகளில் பணியில் உள்ளதாகக் கூறப்பட்ட கௌரிசங்கா், உஷாராணி, ராஜ்குமாா், இளையராஜா, முத்துலட்சுமி, திருநாவுக்கரசு, ராஜேந்திரன், மணிமாறன் ஆகிய 8 பேரிடம் திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வைத்து பல்வேறு தவணைகளாகக் கொடுத்துள்ளாா்.
அதன் பின்னா் கௌரிசங்கா் தரப்பினா் சிலருக்கு வழங்கிய பணி நியமன ஆணைகள் அனைத்தும் போலி எனத் தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட முத்துக்குமாா் கொடுத்த புகாரின்பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் கௌரி சங்கா் உள்ளிட்ட 8 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.