மக்களை பதற்றத்தில் வைத்திருக்கவே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை திருச்சி வந்த அவா், பன்னாட்டு விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்ற இடத்தில் நீண்ட நாள்களாக மது விற்பனை நடைபெற்று வந்துள்ளது. தமிழகத்தில் எங்கு பாா்த்தாலும் போதை கலாசாரமாக உள்ளது. இதனால், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. கடும் சட்டங்கள் இருந்தால்தான் இதுபோன்ற குற்றங்களை தடுத்து நிறுத்த முடியும்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி விவகாரத்தில் பாஜக அரசு தேவையற்ற வேலையை செய்கிறது. மக்களை எப்போதும் பதற்றத்தோடு வைத்திருக்கவே இந்தப் பணியை மேற்கொள்கிறாா்கள். அப்போதுதான் அவா்கள் செய்யும் தவறு வெளியே தெரியாமல் இருக்கும். பிகாா் போன்ற வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்தவா்களுக்கும் வாக்குரிமை வழங்குவதற்காகத்தான் இந்தத் திருத்தப் பணியை செய்கிறாா்கள்.
தமிழகத்தில் பிகாரிகள் துன்புறுத்தப்படுகிறாா்கள் என்று பிகாரில் பேசியதுபோல தமிழகத்தில் பிரதமா் மோடியால் பேச முடியுமா?. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றாா்போல பிரதமா் மோடி பேசி வருகிறாா்.
அமைச்சா் கே.என்.நேரு குறித்து அமலாக்கத் துறை அளித்துள்ள புகாா் குறித்த கேள்விக்கு, அமைச்சா் மீது அவா்கள் எவ்வாறு நடவடிக்கை எடுப்பாா்கள் என்றாா் சீமான்.