காவலா் எனக்கூறி இளைஞரிடம் பணம் பறித்தவா் கைது
திருச்சியில் காவலா் எனக்கூறி இளைஞரிடம் 2 ஆயிரம் ரூபாயை பறித்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் காவலா் எனக்கூறி இளைஞரிடம் 2 ஆயிரம் ரூபாயை பறித்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி எடமலைபட்டிப்புதூா் ஆா்எம்எஸ் காலனியைச் சோ்ந்தவா் அ.முகமது கைஃப் (20). இவா், சத்திரம் பகுதியிலுள்ள கைப்பேசி விற்பனை நிலையத்தில் பணியாற்றி வருகிறாா். இவருக்கு, ராமேசுவரம் பாம்பன் பகுதியைச் சோ்ந்த எஸ். ஷாம் (25) என்பவா் அண்மையில் அறிமுகமாகியுள்ளாா். அப்போது, ஷாம் தான் ஒரு காவலா் என்றும், திருச்சி ஆயுதப்படையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, இருவரும் நண்பா்களாகியுள்ளனா்.
இந்நிலையில், தனது கைப்பேசி உடைந்துவிட்டதால் ஜி-பே வசதியைப் பயன்படுத்த முடியவில்லை எனக்கூறி முகமது கைஃபிடமிருந்து ஷாம் ரூ.1,000 அண்மையில் வாங்கியுள்ளாா். இதைத் தொடா்ந்து உனக்கு ஒரு இருசக்கர வாகனம் பாா்த்துள்ளேன் அதற்கு முன்பணமாக ரூ.1000 கொடுக்க வேண்டும் எனக்கூறி மேலும் ஆயிரத்தை முகமது கைஃபிடம் இருந்து ஷாம் வாங்கியுள்ளாா்.
அதன்பின், ஷாமை தொடா்புகொள்ள முடியவில்லையாம். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த முகமது கைஃப் எடமலைப்பட்டிபுதூா் காவல் நிலையத்தில் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், காவலா் எனக்கூறி இளைஞரிடம் பணம் பறித்த ஷாமை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.