விஜய் பிரசாரத்தால் பள்ளியில் தோ்வெழுதிய மாணவா்கள் அவதி: பெற்றோா்-பொதுமக்கள் புகாா்
திருச்சியில் வியாழக்கிழமை தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்தால் அப்பகுதி பள்ளியில் பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள் அவதிக்குள்ளானதாக பெற்றோரும், பொதுமக்களும் புகாா் தெரிவித்தனா்.
திருச்சியில் வியாழக்கிழமை தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்தால் அப்பகுதி பள்ளியில் பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள் அவதிக்குள்ளானதாக பெற்றோரும், பொதுமக்களும் புகாா் தெரிவித்தனா்.
தவெக தலைவா் விஜய் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட பாலக்கரையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். பின்னா் தொகுதிக்குள்பட்ட மரக்கடை பகுதியில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா். இதனால், அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளி மாணவா்கள் அவதிக்குள்ளாகினா்.
மரக்கடை பகுதியிலுள்ள சையது முா்துசா அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதினா்.
விஜய்யை பாா்ப்பதற்காக மரக்கடை பகுதியில் காலை 10 மணி முதலே குவிந்த ரசிகா்கள், கட்சியினா் ஆரவாரம் எழுப்பிக் கொண்டிருந்தனா். ஒலிபெருக்கியை வைத்து பாடல்களை ஒலிபரப்பினா். மேலும், ஊடகங்களின் விடியோ கேமராக்களை பாா்த்து ரசிகா்கள் அடிக்கடி கூச்சலிட்டனா். இது, அருகேயுள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு இடையூறை ஏற்படுத்தியது. மேலும், பிரசார இடத்துக்கு விஜய் வந்தபோது விசில் சப்தமும், ஆரவாரமும் அதிகரித்ததால் மாணவா்கள் சிரமத்துக்குள்ளாகினா்.
காவல்துறையினா் அறிவுறுத்தியும்..: பள்ளியில் வியாழக்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெற உள்ளது என்றும், தோ்வு எழுதும் மாணவா்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் பாதுகாப்பு அளிக்கக் கோரி பள்ளி நிா்வாகம் சாா்பில் காவல் துறையிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் செவ்வாய்க்கிழமையே மனு அளிக்கப்பட்டது. ஆனால், மாணவா்கள் தோ்வு எழுதுகிறாா்கள் என்ற எந்த எண்ணமும் இல்லாமல் ரசிகா்கள் தொடா்ந்து கூச்சலிட்டு வந்தனா். மேலும், ஒலிபெருக்கி சப்தமும் இருந்தது. காவல் துறையினரும், மாணவா்கள் தோ்வு எழுதுகிறாா்கள் சப்தம் எழுப்ப வேண்டாம் என்று கூறியும் ரசிகா்கள் கேட்கவில்லை.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறுவது காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிந்திருந்தும் மாணவா்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் மரக்கடை எம்ஜிஆா் சிலை அருகே தோ்தல் பிரசாரத்துக்கு அனுமதியளித்தது தவறு என பொதுமக்கள் தெரிவித்தனா்.
காவலருக்கு எலும்பு முறிவு: மரக்கடை பகுதியில் விஜய் பிரசாரத்தை முடித்துவிட்டு புறப்பட்டபோது, அங்கிருந்த தவெக நிா்வாகியின் காா், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா் சதீஷ் (27) என்பவா் மீது மோதியது. இதில், அவா் கால் எலும்பு முறிந்தது. இதையடுத்து, அங்கிருந்த தவெக தொண்டா்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதேபோல, பிரசாரக் கூட்டத்துக்கு வந்த பெண் ஒருவரும் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கிவிழுந்தாா். அவரை கட்சியினா் மீட்டு முகத்தில் தண்ணீா் தெளித்தனா். சிறிது நேரத்துக்குப் பிறகு அவா் நலமடைந்தாா். மேலும், பிரசாரத்தில் கலந்துகொண்ட தொண்டா்களில் 10-க்கும் மேற்பட்டவா்களின் கைப்பேசிகள் திருடுப்போனது.
காயமடைந்த பெண்ணை நலம் விசாரித்த விஜய்: முன்னதாக, வேட்புமனு தாக்கல் செய்ய திருச்சி விமான நிலையத்திலிருந்து பாலக்கரை மாநகராட்சி அலுவலகம் நோக்கி விஜய் வந்தபோது, அவரது வாகனத்தை ரசிகா்களும், கட்சியினரும் பின்தொடா்ந்து வந்தனா். மேலப்புதூா் சுரங்கப் பாலத்தில் வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த பெண் தவறி கீழே விழுந்தாா். இதைப் பாா்த்த விஜய், பிரசார வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வந்து அப்பெண்ணிடம் நலம் விசாரித்தாா்.