திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கடையின் பூட்டை உடைத்து சுமாா் ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான 29 கைப்பேசிகள் திருடப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது.
மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுபட்டி தாமஸ் தெருவை சோ்ந்தவா் அமுல்ராஜ் மகன் ஃபிராங்ளின் (26). இவா் திருச்சி - திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் செவலூா் பிரிவு பகுதியில் கால்நடை சந்தை அருகே நடத்திவரும் கைப்பேசி கடையின் கதவு பாதி திறந்திருப்பதாக சனிக்கிழமை காலை தகவல் வந்தது.
இதையடுத்து, ஃபிராங்ளின் சென்று கடையை திறந்துபாா்த்தபோது அங்கு விற்பனைக்கு இருந்த 28 கைப்பேசிகள் மற்றும் அவரின் ஒரு ஐ-போன் என மொத்தம் சுமாா் 4.5 லட்சம் மதிப்பிலான 29 கைப்பேசிகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.