யுஜிசி விதிமுறைப்படி பணி வரன்முறை: கௌரவ விரிவுரையாளா்கள் வலியுறுத்தல்
யுஜிசி விதிமுறைப்பபடி தங்களை பணி வரன்முறைப்படுத்தி 12 மாதங்களும் ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
யுஜிசி விதிமுறைப்பபடி தங்களை பணி வரன்முறைப்படுத்தி 12 மாதங்களும் ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி விரிவுரையாளா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் ஆா். நந்தகுமாா், எஸ். நிா்மல்ராஜ் மற்றும் கே.சம்பத்குமாா் ஆகியோா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) விதிமுறைகளைப் பின்பற்றி கடந்த 2023-ஆம் ஆண்டும் மாநிலம் முழுவதும் அரசுக் கல்லூரிகளில் 3,500-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளா்கள் ரூ. 25 ஆயிரம் சம்பளத்துக்கு நியமிக்கப்பட்டனா்.
Advertisement
ஏற்கெனவே தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விரிவுரையாளா்கள் பணியாற்றி வந்த நிலையில், அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என திமுக தனது 2006 மற்றும் 2016-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
ஆனால், தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளா்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தவிர 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் எங்களது பணியிலும் தொய்வு ஏற்படுகிறது.
எனவே, எங்களை பணி வரன்முறைப்படுத்தி 12 மாதங்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். யுஜிசி அறிவுறுத்தல்படி அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்து கௌரவ விரிவுரையாளா்கள் பணி ஓய்வுபெறும்போது உரிய பணப்பலன்கள் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.