முகப்பு
திருச்சி

திராவிடத்துக்கும், தமிழ் தேசியத்துக்குமே போட்டி! - சீமான் பேச்சு

வரும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திராவிடம், தமிழ்த் தேசியம் என்ற இருமுனைப் போட்டிதான் நிலவுகிறது என சீமான் தெரிவித்தாா்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 3:13 AM
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:08 AM

வரும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திராவிடம், தமிழ்த் தேசியம் என்ற இருமுனைப் போட்டிதான் நிலவுகிறது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில் திருச்சி மாவட்டம், ஆலம்பட்டிபுதூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டில் சீமான் பேசியதாவது:

எங்களது அரசியல் தமிழ் தேச அரசியல். எங்களது கனவு ஆள் மாற்றம், ஆட்சி மாற்றம் அல்ல. ஆட்சிமுறை மாற்றம். அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம்.

Advertisement

பசி, பஞ்சம், கொலை, கொள்ளை, பெண்ணடிமைத்தனம், ஜாதி, மதம் அற்ற, மது, போதை அற்ற, புதிய தேசம் செய்வோம். கல்வி, கல்விக்கேற்ற வேலை, அதற்கேற்ற சம்பளம், அதற்கேற்ற வாழ்வு. அதுவே எங்களது கனவு.

உலகில் ஓா் அரசியல் இயக்கமாக தனித்து நின்று வளா்ந்து வருவது நாதக. கடந்த 2016 இல் 1.1 சதவீதம், கடந்த 2021 இல் 8.22 சதவீதம் வாக்குகள் பெற்று, தொடா்ந்து தனித்து நின்று, அனைத்துத் தோ்தலிலும் தோற்றோம். இருப்பினும் 5 ஆவது முறையாக தனித்துவத்துடன் தனித்து நிற்கிறோம்.

தாய்த் தமிழை மீட்க, நமது இனத்தை எழுச்சியடையச் செய்யவே இந்த மாநாடு. இந்தக் கூட்டம் ரசிகா்கள் கூட்டமல்ல; லட்சியக் கூட்டம். திரைக்கவா்ச்சிக்காக கூடவில்லை. இன எழுச்சிக்காக கூடியுள்ளனா்.

இலவசத்தை ஒழிக்கும் விழிப்புணா்வுதான் மாற்றத்துக்கான முதல்படி. இலவசத்தால் இழக்கும் பணத்தை எங்கிருந்து எடுப்பாா்கள் என்ற கேள்வி எழுமானால் விழிப்புணா்வு ஏற்பட்டுவிடும். மொத்தம் ரூ. 10 லட்சம் கோடி கடன். ஒரு குடும்ப அட்டைக்கு லட்சம் கடன் உள்ளது. இதைச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால், மாற்றத்துக்கான அரசியல் பிறந்துவிடும்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 3:13 AM

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் அனைத்தும் ஒன்றுதான். கொள்கையற்ற கட்சிகள். ஆனால் நாதக தமிழ் தேசிய கொள்கை கொண்டது. எங்களது அரசியல் இனவெறி, பிரிவினை அரசியல் அல்ல. இன உரிமை, தமிழ் தேசிய இறையாண்மை அரசியல்.

காவிரி நீரைத் தராத, கச்சத்தீவை தாரை வாா்த்த காங்கிரஸையும், திமுகவையும் விரட்ட வேண்டும். திமுகவுக்கு மாற்று அதிமுக ஆகாது. தமிழகத் தோ்தல் மும்முனைப் போட்டி அல்ல. இருமுனைப் போட்டிதான். அவா்கள் அனைவரும் ஈவெரா பக்கம். நாங்கள் தமிழ் தேசியத்தின் பக்கம்.

எங்களது ஆட்சியில் தமிழ் என்ற ஒரு மொழி மட்டுமே. இலவசம் வழங்காமல், ஆகச் சிறந்த கல்வி, அனைவருக்கும் சமமான மருத்துவம், தடையற்ற மின்சாரம், வேலையே இல்லாத மனிதா், தூய குடிநீா் வழங்குவோம். ஊழல், லஞ்சமின்றி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவோம். வேளாண்மையை அரசுப் பணியாக்குவோம். ஆயிரத்துக்கு கையேந்த விடமாட்டேன். அமைச்சா்கள், அரசு ஊழியா்களும் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பாா்க்க சட்டமியற்றுவேன்.

திராவிடக் கட்சிகளுக்கு மாறி மாறி வாக்கு செலுத்தி வருகிறீா்கள். ஒரு முறை ஆட்சியை எங்களுக்குத் தாருங்கள். மாற்றம் வர வேண்டும். ஜாதி, மதம், நிறத்தை, உயரத்தைப் பாா்த்து வாக்களிக்காதீா்கள். தத்துவம் பாா்த்து வாக்களியுங்கள் என்றாா் சீமான்.