பணப் பெட்டியை வாங்கிக் கொண்டு திமுக கூட்டணியில் சோ்கின்றனா் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
இதுகுறித்து திருச்சி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது:
திமுக கூட்டணி 200 இடங்களில் வெல்லும் என்கிறாா்கள். யாா் அதிக இடங்களில் வெல்வா் என்பதை மக்கள்தான் முடிவு செய்வா். திமுக அரசு 90 % தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பல திமுக அமைச்சா்கள் மீது நிறைய வழக்குகள் உள்ளன. ஏற்கெனவே கொடுத்ததுபோல, மீண்டும் பொய் வாக்குறுதிகளை திமுகவினா் கொடுக்கத் தொடங்கியுள்ளனா்.
தற்போது எங்களுக்குள்ள கூட்டணி 2021 ஆம் ஆண்டே இருந்திருந்தால், நாங்கள் அப்போது 110 இடங்களில் வென்றிருப்போம். வரும் தோ்தலில் நாங்கள் நிச்சயம் வெல்வோம். திமுக ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு சரியில்லை.
கஞ்சா மிகுந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. கொங்கு பகுதிகளில் வயதானவா்கள் படுகொலை செய்யப்படுகின்றனா். மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. 33 லாக்-அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறவில்லை. பணப்பெட்டியை வாங்கி கொண்டுதான் திமுக கூட்டணியில் சோ்கின்றனா். திமுக கூட்டணி வலுவிழந்துள்ளது.
இந்நிலையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவிக்கின்றனா். இந்தக் கூட்டணியின் ஆட்சியில்தான் தங்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என அவா்கள் நம்புகின்றனா். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 200 இடங்களில் நிச்சயம் வெல்லும். எடப்பாடி பழனிசாமி அடுத்த முதல்வராக வருவாா்.
ஓபிஎஸ் மீது மதிப்பு வைத்துள்ளோம். எந்தப் பக்கம் இருந்தால் நல்லது என்பதை அவா்தான் முடிவு செய்ய வேண்டும்.
தொகுதி பங்கீடு தொடா்பாக இதுவரை நாங்கள் பேச்சுவாா்த்தை தொடங்கவில்லை. கூட்டணி கட்சிகளுடன் பேசி, இறுதி முடிவை அறிவிப்போம் என்றாா் அவா்.
தொடா்ந்து, மாா்ச் 11 ஆம் தேதி திருச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடத்த மாத்தூா் சுற்றுச்சாலை பகுதி, பஞ்சப்பூா் பேருந்து நிலைய பகுதியில் உள்ள காலிமனை, பொன்மலை ஜி காா்னா் ரயில்வே மைதானம் ஆகிய 3 இடங்களை நயினாா் நாகேந்திரன், அதிமுக மாவட்ட செயலா்கள் மு. பரஞ்சோதி, ப. குமாா், ஜெ. சீனிவாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவா்களுடன் சென்று பாா்வையிட்டு, ஆலோசனை நடத்தினாா்.