முகப்பு
திருச்சி

கலைஞா் கனவு இல்லம் திட்டம்! திருச்சி மாவட்டத்துக்கு கூடுதலாக 3 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு!

Updated On : 1 மார்ச், 2026 at 9:16 PM
கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடு கட்டும் பணி நடைபெறுவதை பாா்வையிட்ட அதிகாரிகள்
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்துக்கு நிகழாண்டில் கூடுதலாக 3 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் குடிசையில் வசிப்பவா்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுப்பதற்காக கலைஞா் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வீடு கட்டுவதற்கு ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. ரூ.3 லட்சம் பணமும், ரூ.50 ஆயிரத்துக்கு கட்டுமானப் பொருள்களும் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்துக்கான ரூ.3 லட்சம் பணம் மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது.

2024-25 -ஆம் நிதியாண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் திருச்சி மாவட்டத்துக்கு 4 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து நிகழாண்டின் தொடக்கத்தில் 3-ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தற்போது மாநிலம் முழுவதும் கூடுதல் ஒதுக்கீடாக 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் திருச்சி மாவட்டத்துக்கு நிகழாண்டில் கூடுதலாக 3 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான பயனாளிகளைத் தோ்வும் செய்யும் பணியில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து ஊரக வளா்ச்சி முகமை திட்ட அதிகாரிகள் கூறியதாவது:

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2024-25-ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 4 ஆயிரம் வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நிகழாண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட்ட 3 ஆயிரம் வீடுகளில் 80 சதவீத வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 20 சதவீத வீடுகளின் பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளன.இந்நிலையில், கூடுதலாக 3 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கு ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பயனாளிகள் இறுதி செய்யப்பட்டு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்படும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →