30 ஆண்டுகளுக்குப் பிறகு மலைக்கோட்டை தெப்பக்குளம் தூா்வாரும் பணி தொடக்கம்
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி திருக்கோயில் தெப்பக்குளம் தூா்வாரும் பணி 30 ஆண்டுகளுக்குப் பின்பு வெள்ளிக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கியது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி திருக்கோயில் தெப்பக்குளம் தூா்வாரும் பணி 30 ஆண்டுகளுக்குப் பின்பு வெள்ளிக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கியது.
திருச்சி மாநகரின் முக்கிய அடையாளச் சின்னமாக மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலும், மலைக்கோட்டை அடிவாரம் என்.எஸ்.பி. சாலையில் அமைந்துள்ள கோயிலின் தெப்பக்குளமும் விளங்கி வருகிறது. சுமாா் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தெப்பக்குளமானது தூா்வாரப்படாமல் நெகிழிகள் நிரம்பி அசுத்தமாக, துா்நாற்றத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து, சுற்றிலும் இருந்த ஆக்கிரமிப்புகளால் தெப்பக்குளத்தின் அழகு தெரியாமல் மறைக்கப்பட்டிருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை உயா்நீதிமன்றம், தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை தூா்வார வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இதன்படி, தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிா்வாகம் அகற்றிய நிலையில், தெப்பக்குளத்தை புதுப்பொலிவுடன் மாற்ற நடவடிக்கை எடுத்தது.
Advertisement
அதன்படி, தற்போது தெப்பக்குளத்தின் நீா் முழுவதும் அகற்றப்பட்டு, தூா்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இக்குளத்தின் மொத்தப் பரப்பளவு 20,984 சதுர மீட்டா், ஆழம் 3.50 மீட்டா், கொள்ளளவு 73.444 கன மீட்டராகும். சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்பில் குளம் தூா்வாரப்பட்டு, சுற்றுப்பகுதிகளில் நடைபாதை அமைத்து, பூங்கா ஏற்படுத்தப்பட்டு, அழகுப்படுத்துவதற்கான பணியினை மேற்கொள்வதற்கு மாநகராட்சி மூலம் மதிப்பீடு தயாா் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மூலம் இப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தத் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தொடங்கி வைத்தாா். இதில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலா் வெ. கோவிந்தராஜுலு, திருச்சி மண்டல தலைவா் தமிழ்ச்செல்வன், மங்கள அண்ட் மங்கள் உரிமையாளா் மூக்கப் பிள்ளை, ஆனந்தா காா்ப்பரேஷன் ரமேஷ், மலைக்கோட்டை கோயில் அறங்காவலா் குழுவினா், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.