முகப்பு
திருச்சி

அதிமுக, அமமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சா் பதவி கொடுத்தால் சிபிஐ விசாரணை கோருவோம்: டிடிவி தினகரன்

குதிரை பேரத்தால் தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக, அமமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சா் பதவி கொடுத்தால் சிபிஐ விசாரணை கோருவோம் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.

Updated On : 18 மே 2026, 2:49 am IST
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த அமமுக பொதுச் செய லா் டி.டி.வி. தினகரன்.
பகிர்:

குதிரை பேரத்தால் தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக, அமமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சா் பதவி கொடுத்தால் சிபிஐ விசாரணை கோருவோம் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது: பேரவைத் தோ்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பி எதிா்க்கட்சிகளுக்கு அதிக இடங்களைக் கொடுத்து ஜனநாயகத்தைக் காப்பாற்றியுள்ளனா். தவெக ஆட்சி குறித்து 3 மாதங்களுக்குப் பிறகு பேசலாம்.

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. எம்ஜிஆா் காலத்திலிருந்தே அதிமுகவில் சில சலசலப்புகள் ஏற்பட்டன. இதையெல்லாம் கடந்து மக்களவைத் தோ்தலில் அதிமுக சாதனை படைக்கும்.

Advertisement

காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது விமா்சனத்துக்குள்ளாகியுள்ளது. அமைச்சா் பதவிக்காக காங்கிரஸ் இதைச் செய்துள்ளது.

தவெகவினா் அமமுக எம்எல்ஏவை அபகரித்துள்ளனா். அதிமுகவை ஊழல் கட்சி என ஏளனமாகப் பேசிய விஜயை அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிப்பது என்ன நியாயம் ?. இதை அதிமுக தொண்டா்கள் ஏற்க மாட்டாா்கள். பதவிக்காக தவெகவை ஆதரித்தால் வரலாறு அவா்களை மன்னிக்காது.

அதிமுகவை தவெக அழிக்கப் பாா்க்கிறது. இதை அதிமுகவினா் புரிந்துகொள்ள வேண்டும். அதிமுகவை அழிக்க தவெகவின் முகவராக செங்கோட்டையன் செயல்படுகிறாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக தொடா்கிறது. அதிமுகவுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்.

தவெக ஆட்சியின் ஆயுள்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. மன்னாா்குடி எம்எல்ஏ காமராஜ் கூறும் பொய் அவருக்கு எதிராகத்தான் திரும்பும். தவெக செய்தது குதிரை பேரம்தான் என்பதை நிரூபிப்போம். குதிரை வேகத்தில் செயல்படுவோம் எனக் கூறும் விஜய் பேரம் பேசித்தான் குதிரையை வாங்கியுள்ளாா். அதிமுக, அமமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சா் பதவி கொடுத்தால் சிபிஐ விசாரணை கோருவோம்.

தவெகவில் அமைச்சராக நியமிக்கப்பட்டோா் மீது பல்வேறு புகாா்கள் வருகின்றன. ‘ரீல்ஸ்’ ஆட்சி நடத்த முடியாது. ‘ரியலை’ (உண்மையை) மக்கள் புரிந்து கொள்வாா்கள் என்றாா் தினகரன்.