ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
ஆரணி, ஆக. 19: ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். ஆரணி, சேத்துப்பட்டு, போளூர், கண்ணமங்கலம் மற்றும் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமப்பகு
ஆரணி, ஆக. 19: ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.
ஆரணி, சேத்துப்பட்டு, போளூர், கண்ணமங்கலம் மற்றும் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில் பெரிய அரசு மருத்துவமனையாக ஆரணி அரசு மருத்துவமனை திகழ்கிறது. ஆனால் இங்கு மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை பெற முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆரணி அரசு மருத்துவமனையில் 15 மருத்துவர்கள் பணி புரிவதற்கு பதில் 4 பேர் மட்டுமே உள்ளனர். 11 மருத்துவர்களின் இடங்கள் காலியாக உள்ளது. 4-ல் ஒரு பங்கு மருத்துவர்கள் மட்டும் உள்ளதால் 4 மருத்துவர்களும் பணி நேரம் ஒதுக்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.
Advertisement
தற்போது மருத்துவர் கார்த்தீசன் தலைமை மருத்துவராக (பொறுப்பு) செயல்பட்டு வருகிறார். மருத்துவர்கள் கவிதா, சாந்தி, இளையமுருகன் ஆகியோர் மட்டுமே உள்ளனர். மேலும் மருத்துவ பணியாளர்கள் 10 பேரை நியமனம் செய்திருக்க வேண்டும்.
ஆனால் 3 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். 7 இடங்கள் காலியாக உள்ளது. இதேபோல் துப்பரவு பணியாளர்கள் 10 பேருக்கு 4 பேரும், நோயாளிகளுக்கு சமையல் செய்ய 2 பேருக்கு பதில் ஒருவரும் பணிபுரிந்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் எக்ஸ்ரே எடுக்க மருத்துவர் இல்லை, லேப் டெக்னீசியன், வாட்ச்மேன், மருந்து அலுவலர் என எல்லா காலியிடங்களும் நியமனம் செய்யப்படாமல் உள்ளது.
விபத்து ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் நோயாளிகளை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தால் மருத்துவர்கள் இல்லாததால் உடனடியாக வேலூர், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பிவிடுகின்றனர். இதனால் காலம் தாமதம் ஏற்பட்டு உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது. ஆரணி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் கார் இருந்தும் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. அவசரத்திற்கு கூட டிரைவர் வண்டியை எடுக்க மறுத்துவருவதாக நோயாளிகள் புகார் தெரிவித்தனர்.
இம்மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் போதுமான படுக்கை வசதி இல்லை. இம்மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் சார்பில் கட்டப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.
இவ்வாறு ஆரணி அரசு மருத்துவமனை பல குறைகளைக்கொண்டுள்ளது. அரசு இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.