தரம் உயர்த்தப்படுமா கல்லாவி ஆரம்ப சுகாதார நிலையம்?
கிருஷ்ணகிரி, ஆக.19: கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே வலுத்து வருகிறது. இதற்காக அவர்கள் போராடவும் தயாராகி வருகின்றனர். ஊ
கிருஷ்ணகிரி, ஆக.19: கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே வலுத்து வருகிறது. இதற்காக அவர்கள் போராடவும் தயாராகி வருகின்றனர்.
ஊத்தங்கரை தாலுகா, கல்லாவி ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த சுகாதார நிலையம் கடந்த 7.12.1988-ல் அரசு கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் 11 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுகாதார நிலையத்தின் மூலம் 83 கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களைச் சேர்ந்த 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.
Advertisement
தற்போது இந்நிலையத்துக்கு தினமும் 400-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்லுகின்றனர். மாதத்துக்கு சராசரியாக 45 பிரசவங்கள் நடைபெறுகின்றன. நூற்றுக்கணக்கான சக்கரை நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
1.3 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்நிலயத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறப்படுகிறது. இரு மருத்துவர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் தற்போது ஒரு மருத்துவர் மட்டுமே பணியாற்றி வருகிறார்.
மருத்துவமனை வளாகத்தில் குடியிருப்பு வசதிகள் இல்லாததால் இரவு நேரங்களில் மருத்துவர்கள் தங்க முடியாத நிலை உள்ளது. இதனால் அவசர சிகிச்சை தேவைப்படுவோர் 45 கி.மீ. தொலைவில் உள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி அரசு மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர்.
எனவே இந்த மருத்துவமனையை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும் என கடந்த 3 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர். பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள். மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?