ஆரணி, ஆக. 27: ஆரணி வழியாக ரயில் பாதை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று இரண்டரை ஆண்டு ஆகியும், பணிகள் தொடங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான ஆரணியில் பட்டு மற்றும் அரிசி தொழில்கள் பெருமளவு நடைபெறுகிறது.
இந்நகருக்கு ரயில் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று ஆரணி சேம்பர் ஆப் காமர்ஸ், ஆரணி பலசரக்கு மளிகை வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், நகர மக்களும் வலியுறுத்தி வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அப்போதைய ரயில்வே இணை அமைச்சர் அரங்க.வேலு இதற்கான முயற்சியை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, |715 கோடியில் திண்டிவனத்திலிருந்து, வந்தவாசி, செய்யாறு, ஆரணி வழியாக ஆர்க்காடு, ராணிப்பேட்டை வரை ரயில் பாதை அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்துக்காக முதல் கட்டமாக |400 கோடி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, ஆரணியில் 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. ஆனால், தற்போது இரண்டரை ஆண்டுகள் முடிந்தும் இதுவரை அந்த இடத்தில் பெயர்ப் பலகை தவிர வேறு எந்த பணியும் நடைபெறவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது:
ஆர்க்காடு உள்ளிட்ட நகரங்களில் இத்திட்டத்துக்கான ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றனர்.
இதுகுறித்து மக்களவை உறுப்பினர் எம்.கிருஷ்ணசாமி கூறியது, ரயில்வே துறையில் இத்திட்டத்துக்கு |50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர். இதற்குண்டான பணிகள் இந்த ஆண்டு நடைபெறும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.