திருவண்ணாமலை, ஜூன் 2: விசா காலம் முடிந்த நிலையிலும், உரிய விசா இன்றி திருவண்ணாமலையில் அயல்நாட்டினர் தங்கியுள்ளதால் பல்வேறு பிரச்னைகள் உருவாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக உள்ளது திருவண்ணாமலை. மாதந்தோறும் பெüர்ணமியின்போது கிரிவலம் செல்வதற்காக லட்சக்கணக்கானோர் இங்கு வருகின்றனர்.
கிரிவலப் பாதையில் ஏராளமான ஆசிரமங்கள் இயங்கி வருகின்றன. ஆண்டுதோறும் புதிய ஆசிரமங்களும் உருவாகி வருகின்றன.
இந்நிலையில், திருவண்ணாமலைக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் வந்து செல்கின்றனர். குறிப்பாக ரஷியா, இத்தாலி, அமெரிக்கா, ஜரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமங்களில் தங்கி யோகா மற்றும் தியானம் கற்றுச்செல்கின்றனர்.
அத்துடன், புதுச்சேரி ஆரோவில்லுக்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டினரும் திருவண்ணாமலைக்கு வந்து செல்வதுண்டு.
இவர்களில் குறிப்பாக பிரான்ஸ் நாட்டு விசா பெற்றவர்களே அதிகம் உள்ளனர்.
திருவண்ணாமலையில் தற்போது தங்கியுள்ள நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் உரிய விசா வைத்துள்ளார்களா? விசா காலம் முடிவுற்ற பிறகும் தங்கியுள்ளனரா? என்பது குறித்த விவரம் சரிவர தெரியவில்லை.
யோகா மற்றும் தியானம், இயற்கை மருத்துவத்தை கற்றுக் கொள்ள வரும் வெளிநாட்டினரில் பலர் போதை மருந்து பயன்படுத்துபவர்களே அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் கிரிவலப் பாதையை ஒட்டிய பகுதிகளில் உள்ளூர் நபர்கள் மூலம் சொந்தமாக வீடு, வாகனங்களை வாங்குகின்றனர்.
மேலும், நிரந்தர இந்திய குடியுரிமை பெறுவதற்காக புரோக்கர்கள் மூலம் உள்ளூர் நபர்களை வெளிநாட்டினர் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. பின்னர் சிறிது காலத்தில் தங்கள் நாடுகளுக்கும் சென்று விடுகின்றனர்.
இது தவிர வெளிநாடுகளில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களும் திருவண்ணாமலையில் தங்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. வெளிநாட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் திருவண்ணாமலையில் இருப்பதால் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம் தாராளமாக உள்ளதாகவும் பரவலாக புகார் உள்ளது.
திருவண்ணாமலைக்கு வரும் வெளிநாட்டினர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் முறையாக தங்கள் பெயர்களை பதிவு செய்ய
வேண்டும்.
இதே போல், தங்கள் வீடுகளில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் குறித்த தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்தில் வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும்.
ஆனால், இத்தகைய நடைமுறையை யாரும் பின்பற்றுவதாக தெரியவில்லை. இதை வீட்டு உரிமையாளர்கள் பின்பற்றுவதில்லை என்று கூறப்படுகிறது.
வெளிநாட்டினருக்கென பிரத்யேக துணி, கலைப் பொருள் விற்பனை கடைகள், உணவு விடுதிகள் இயங்குகின்றன. இத்தகைய இடங்களில் வெளிநாட்டினர் போதைப் பொருள்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்பிரச்னை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோ.பாண்டியன் கூறியது: திருவண்ணாமலை நகரில் அனுமதி இல்லாமலும், உரிய விசா இல்லாமலும் தங்கி உள்ள வெளிநாட்டினர் குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும். காவல் துறை அலுவலகத்தில் பெயர்களை முறையாக பதிவு செய்கின்றனரா எனவும் கண்காணிக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.