மத்திய அமைச்சரின் பெயரில் போலி பரிந்துரைக் கடிதங்கள்?
அரக்கோணம், மார்ச் 19:ரயில்வேயில் தற்போது வழங்கப்படும் மாதம் ரூ.1200-க்கு குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான சலுகை கட்டண மாதாந்திர பயணச் சீட்டை பெறுவதற்கு மக்களவை உறுப்பினரும், மத்திய இணை அமைச்சருமான
அரக்கோணம், மார்ச் 19:ரயில்வேயில் தற்போது வழங்கப்படும் மாதம் ரூ.1200-க்கு குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான சலுகை கட்டண மாதாந்திர பயணச் சீட்டை பெறுவதற்கு மக்களவை உறுப்பினரும், மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகனின் போலி கையெழுத்திட்ட கடிதங்கள் பல வருவதாக புகார் எழுந்துள்ளது.
2010-11 பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய ரயில்வே அமைச்சர் மம்தாபானர்ஜி, ரூ.1200-க்கு குறைவாக ஊதியம் பெறும் அமைப்பு சாரா பணியாளர்களுக்காக மாதம் ஒன்றுக்கு ரூ.25 சலுகை கட்டணத்தில் பயணச் சீட்டு அறிமுகம் செய்தார்.
இதற்கான அனுமதிச் சீட்டு பெறுவதற்கு மக்களவை உறுப்பினரின் பரிந்துரைக் கடிதம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தந்த தொகுதிக்குட்பட்ட அமைப்புசாரா பணியாளர்களுக்கு மக்களவை உறுப்பினர்கள் இந்த பரிந்துரை கடிதங்களை தருகின்றனர். தற்போது அரக்கோணம் ரயில் நிலையத்தில் மட்டும் தினமும் 300-க்கும் மேற்பட்டோர் சலுகை கட்டண மாதாந்திர பயணச் சீட்டு பெறுகின்றனர்.
இந்நிலையில், அரக்கோணம் மக்களவை உறுப்பினரும், மத்திய தகவல் ஒலிபரப்புத்
துறை இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகனின் பெயரில் வரும் பரிந்துரை கடிதங்களில் கையெழுத்து கடிதத்துக்கு கடிதம் வேறுபடுவதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
அரக்கோணம் பகுதியில் சிலர் அமைச்சரின் லெட்டர்பேடை பிரிண்ட் செய்து போலி அலுவலக முத்திரை தயார் செய்து பச்சை வண்ணத்தில் அமைச்சரின் கையெழுத்து போன்று போட்டு அனுமதி கடிதங்களை விநியோகம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த போலி கடிதங்கள் ரூ.200 வரை விலைக்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எது அசல், எது போலி என தெரியாத நிலையில் அனைத்து கடிதங்களுக்கும் சலுகை கட்டண பயணச் சீட்டை அளித்து வருகின்றனர் ரயில்வே அதிகாரிகள்.