முகப்பு
வேலூர்

வேலையில்லை; வாழவும் வழியில்லை விடியலைத் தேடும் விழியிழந்தோர்!

வேலூர், நவ. 17: அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதால், வாழ்வாதாரத்துக்கு வழியின்றி அவதிப்பட நேர்கிறது என்று பார்வையிழந்தோர் குற்றம்சாட்டினர்.  தமிழக மக்கள் தொகையில் 3 சதவ

Updated On : 20 செப்டம்பர், 2012 at 8:56 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 11:44 PM

வேலூர், நவ. 17: அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதால், வாழ்வாதாரத்துக்கு வழியின்றி அவதிப்பட நேர்கிறது என்று பார்வையிழந்தோர் குற்றம்சாட்டினர்.

 தமிழக மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகள். இதில் விழியிழந்தோர் மட்டும் ஒரு சதவீதத்தினர் இருப்பார்கள் எனத் தெரிகிறது. இதில், பலர் முற்றிலுமாக பார்வையிழந்தவர்கள், சிலர் ஓரளவு பார்வை இழந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் இடம் கிடைத்தாலும், அரசு சலுகைகள் கிடைப்பதில் மெத்தனப்போக்கு நிலவுகிறது என்று குற்றம்சாட்டுகின்றனர்.

 குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க 1995-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அதன்படி உரிய வேலைவாய்ப்புகள் இதுவரை வழங்கப்படவில்லை.

Advertisement

  பல்வேறு துறைகளில் 1995-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. இதனால், படித்தும் பார்வைத் திறனற்றோருக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை இருக்கிறது.

 அதனால், ரயில்களிலும், பஸ் நிலையங்களிலும் பொருள்களை விற்பனை செய்து வாழ்க்கை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். உரிய வருவாய் இன்றி, குடும்பத்தை நடத்த வழியின்றி, தினசரி வாழ்க்கைக்கே போராட வேண்டிய நிலையில் இருகின்றனர்.

"அரசு நினைத்தால், நிச்சயமாக 1995-ம் ஆண்டிலிருந்து காலியாக, கைவிடப்பட்ட பணியிடங்களை நிரப்பினால், தமிழகத்தில் பல நூறு பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பார்வையிழந்தோராலும் செய்யக்கூடிய பணிகள் பல உள்ளன. அதில்,  தொலைபேசி இயக்குபவர் பணி, கணினி, தட்டச்சு, வரவேற்பாளர், பேருந்து நிலையங்களில் நேரம் அறிவிப்பாளர் எனப் பல்வேறு பணிகள் இருந்தும், அவற்றை மாற்றுத்திறனாளிகளுக்குக் கொடுப்பதில் அரசு ஏனோ மெüனம் சாதிக்கிறது' என்கிறார் மாற்றுத்திறனாளி கருணாகரன்.

 அதேபோல, தனியார் நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்துவதில் உரிய ஈடுபாடு காட்டுவதில்லை. மற்றவர்களைப் போல ஒரு சில மாற்றுத்திறனாளிகளால் பணி செய்ய முடியாது என்பது உண்மையாக இருந்தாலும் கூட, அவர்களது சக்திக்கு ஏற்ப வேலையும், ஊதியமும் கொடுக்க நிறுவனங்கள் முன்வருவதில்லை.

 அண்மையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு அலுவலகமும், தனியார் நிறுவனங்களும் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பில், 100-க்கு 3 மாற்றுத்திறனாளர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்தது. காரணம், 12 மணி நேர வேலை, ரூ.3 ஆயிரம் ஊதியம், பணியிடத்திலேயே தங்கிப் பணியாற்றும் சூழல் போன்றவை இருந்ததால், அதைப் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. தனியார் நிறுவனங்கள், தங்களது பணிக் கொள்கையில் மாறுதல் கொண்டுவர வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

 தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.நம்புராஜன் கூறியது:

 அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கல்வி, கல்வி உதவித்தொகை கிடைப்பதில், பல  மாவட்டங்களில் மறுவாழ்வு அலுவலகம் கடைப்பிடிக்கும் மெத்தனப் போக்கைக் கைவிட வேண்டும். அலுவலகத்துக்குள் வரும் மாற்றுத்திறனாளிகளை அவர்கள் மதிப்பது கூட கிடையாது.

 ரயிலில் பொருள்கள் விற்பனை செய்து பிழைத்து வரும் பார்வைத்திறன் குறைந்தவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. அவர்களை சட்டரீதியாக அங்கீகரித்து, அவர்களுக்கு உரிமங்கள் வழங்க ரயில்வே துறை உயரதிகாரிகளிடம் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம். தற்போது தென்னிந்திய அளவில், மாற்றுத்திறனாளிகளை ஒன்று சேர்க்கும் இயக்கம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு முழுவீச்சில் தொடங்கப்பட்டிருக்கிறது.

 இதன் மூலம், டிசம்பர் 3-ம் தேதிக்குப் பிறகு, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை, வாழ்வாதார வழிகளைக் கேட்டு அரசின் கவனத்தை ஈர்க்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.