ஆரணி தாற்காலிக பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் அவதி!
ஆரணி, அக். 22: ஆரணி கோட்டை மைதானத்தில் இயங்கி வரும் தாற்காலிக பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர். ஆரணி மார்க்கெட் சாலை, காந்தி ரோடு, சத்தியமூர்த்தி சாலை ப
ஆரணி, அக். 22: ஆரணி கோட்டை மைதானத்தில் இயங்கி வரும் தாற்காலிக பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஆரணி மார்க்கெட் சாலை, காந்தி ரோடு, சத்தியமூர்த்தி சாலை பகுதிகளில் ரூ.3 கோடி மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பழைய பஸ்நிலையம் தாற்காலிகமாக கோட்டை மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒரிரு மாதங்களில் பணிகள் முடிவடைந்து, மீண்டும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பழைய பஸ்நிலையத்தை ரூ. 1 கோடியில் மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. சனிக்கிழமை திருவண்ணாமலைக்கு வரும் துணை முதல்வர் ஸ்டாலின் இப்பணிக்கான அடிக்கல் நாட்டுகிறார். இதனால் மேலும் 6 மாதங்கள் கோட்டை மைதானத்திலேயே பஸ் நிலையம் செயல்படும் எனத் தெரிகிறது.
தாற்காலிக பஸ் நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் தவித்து வருகின்றனர். இங்கு பயணிகள் நிற்பதற்கும், குழந்தைகளோடு வரும் தாய்மார்கள் அமர்வதற்கும் இடமில்லை. மழை பெய்யும் நேரங்களில் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாமல் பயணிகள் தவிக்கின்றனர். கழிப்பிட வசதி இல்லாதததால் குறிப்பாக பெண்கள் தவித்து வருகின்றனர்.
Advertisement
சிறிதளவு மழை பெய்தால்கூட ஆங்காங்கே குட்டை போல் மழை நீர் தேங்கி நிற்பதால் பயணிகள் பஸ் ஏற முடியாமல் தவிக்கின்றனர். தாற்காலிக பஸ்நிலையத்தை சுற்றிலும் 3 மேல்நிலைப்பள்ளிகள் அமைந்துள்ளன. பள்ளி துவங்கும் நேரம், முடியும் நேரங்களில் பஸ்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே கோட்டை மைதானத்தில் இருந்து பஸ்கள் வெளியேற மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணிகள் நலன்கருதி தாற்காலிக பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து ஆணையாளர் சசிகலாவிடம் கேட்டபோது, பழைய பஸ்நிலையத்தை மேம்படுத்த ரூ. 1 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இப்பணிகள் ஆரம்பிக்கும்போது தாற்காலிக பஸ்நிலையத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதருவோம் என்றார்.