ஆசிரியர்களே இல்லாத பலாந்தாங்கல் அரசு தொடக்கப்பள்ளி
ஆரணி, பிப். 2: ஆரணி அடுத்த பலாந்தாங்கல் கிராமத்திலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சேர்க்க தனியார் பள்ளிகளைத் தேடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பலாந்தாங்
ஆரணி, பிப். 2: ஆரணி அடுத்த பலாந்தாங்கல் கிராமத்திலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சேர்க்க தனியார் பள்ளிகளைத் தேடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பலாந்தாங்கல் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பலாந்தாங்கல் அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5- ம் வகுப்பு வரை நடைபெற்று வருகிறது. இக்கிராமத்திலுள்ள மாணவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இப்பள்ளியில் பயின்று வந்தனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இந்த ஆண்டு 38 பேர் பயின்று வருகின்றனர்.
மேலும், இந்த அளவிற்கு குறைவதற்கு காரணம் இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி திறந்தது முதல் தலைமையாசிரியை மட்டும் உள்ளார். எந்த ஆசிரியரும் இப்பள்ளிக்கு வர விரும்பாததால் தலைமையாசிரியையே அனைத்து வகுப்புகளுக்கும் சென்று பாடம் நடத்தி வருகிறார். இதன் காரணமாக 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த இப்பள்ளியில் தற்போது மாணவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில் இப்பள்ளியில் தலைமையாசிரியை மட்டுமே உள்ளார். எங்கள் பிள்ளைகள் தினமும் பள்ளிக்கு சென்று வருவதோடு சரி. எதையும் படிக்கத் தெரியாமல் உள்ளனர். இதன் காரணமாக நாங்கள் அருகில் ஆரணியில் உள்ள தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்து வருகிறோம் என்றனர்.
Advertisement
இது குறித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸிடம் கேட்டதற்கு, பலாந்தாங்கல் அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த ஆண்டு இருந்த ஆசிரியர் பதவி உயர்வு பெற்று வேறு பள்ளிக்கு சென்றுவிட்டார். மேலும் தி.மலை மாவட்டத்தில் மட்டும் அரசு தொடக்கப்பள்ளிகளில் 50 ஆசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு தமிழக அரசு ஆசிரியர் நியமனம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். இதுவரை நியமனம் செய்யாததால் இந்த நிலை உள்ளது என்று கூறினார்.
இது குறித்து தன்னார்வலர்கள் கூறியது:
ஒவ்வொரு வருடமும் தமிழக அரசின் பட்ஜெட்டில் கல்விக்காக நிதியை அதிகமாக்கி வருகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை படிக்கவைக்க பெற்றோர் விரும்புவதில்லை. காரணம் அரசின் அலட்சியம்தான். அரசு ஆசிரியர்களை முறையாக நியமனம் செய்து பள்ளிகளில் சரியான முறையில் வகுப்புகளை நடத்துவது கிடையாது என்ற எண்ணம் பெற்றோர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டதால்தான் அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் தயங்குகின்றனர்.
மேலும் பலாந்தாங்கல் அரசுப் பள்ளியில் ஒரு ஆசிரியரும் இல்லை. கடந்த 10 மாதங்களாக ஆசிரியரை நியமிக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினர்.
மேலும் இப்பகுதி மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ளனர். தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதால் பணம் நிறைய செலவாகிறது. இதனால் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆகையால் அரசு இப்பள்ளியை இழுத்து மூடாமல் ஆசிரியர்களை நியமனம் செய்து பள்ளியை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.