2 மணி நேர மின்நிறுத்தம் செயல்முறை தேர்வுகள் பாதிப்பு?
அரக்கோணம், பிப். 2: பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் வியாழக்கிழமை தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில், 2 மணி நேர மின்நிறுத்தம் காரணமாக தேர்வுகள் பாதிக்கப்படுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பொதுத்தேர்வுகள் நெருங்
அரக்கோணம், பிப். 2: பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் வியாழக்கிழமை தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில், 2 மணி நேர மின்நிறுத்தம் காரணமாக தேர்வுகள் பாதிக்கப்படுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பொதுத்தேர்வுகள் நெருங்கும் சூழ்நிலையில், பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் மாநிலம் முழுவதும் உள்ள அரசு, தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் வியாழக்கிழமை தொடங்குகிறது. காலை 10 மணி முதல் 1 மணி வரை ஒரு பிரிவும், மதியம் 2 மணி முறை 5 மணி வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வுகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், மாநிலத்தில் 2 மணி நேர நிறுத்தம் அமலில் உள்ளது. பல பகுதிகளில் காலை 10-12 மணி, 12-மதியம் 2 மணி, மதியம் 2 மாலை 4 மணி, மாலை 4-6 மணி என்ற வகையில் நேரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல் தேர்வுக்கு மின்சாரம் கட்டாயம்!
செயல்முறை தேர்வுகளுக்கு கண்டிப்பாக மின்சாரம் தேவை. முக்கியமாக, இயற்பியலில் உள்ள மீட்டர் தமன சுற்று, மின் அழுத்தமானி, நிறமாலைமானி, கீற்றனி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட செய்முறை தேர்வுகள் மின்சாரம் இல்லையெனில், தேர்வு நடைபெறாது.
இந்நிலையில், மின்நிறுத்தம் செய்யப்படும்போது பள்ளிகளிலும் மின்சாரம் தடைபடும்.
"செயல்முறைத் தேர்வு தொடங்கும்போதோ அல்லது பாதியில் இருக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டாலோ தேர்வை மாணவர்கள் மேற்கொள்ள இயலாத சூழ்நிலை நிலவும்.
இதை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பது தெரியவில்லை என்கின்றனர் மேல்நிலைப் பள்ளிகளின் அறிவியல் ஆசிரியர்கள்.
பெரும்பாலான அரசு, தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் ஜெனரேட்டர் வசதி கிடையாது. இச்சூழலில் மின்நிறுத்தம் காரணமாக செயல்முறைத் தேர்வுகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, செய்முறை தேர்வுகள் நடக்கும் நாள்களில் மின்நிறுத்தம் செய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது ஏதேனும் மாற்று நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பு.