முகப்பு
வேலூர்

கால்நடை தீவனப் பயிர்

அரக்கோணம்: கால்நடை தீவனப் பயிரான "கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ-3' பயிரிட்டு மாடுகளுக்கு அளிப்பதன் மூலம் பால்வளத்தை அதிகரிக்க முடியும் என  கால்நடை மருத்துவர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.   இத் தீவனப் ப

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:32 PM
பகிர்:

அரக்கோணம்: கால்நடை தீவனப் பயிரான "கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ-3' பயிரிட்டு மாடுகளுக்கு அளிப்பதன் மூலம் பால்வளத்தை அதிகரிக்க முடியும் என  கால்நடை மருத்துவர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.

  இத் தீவனப் பயிரை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். நிலத்தை தயாரிக்க இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழ வேண்டும். ஹெக்டேருக்கு 25 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும். 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.

உரமிடுதல்: மண் பரிசோதனை செய்து அதன் பின்னர் உரமிடவது நல்லது. மண் பரிசோதனை செய்யாவிடில் ஹெக்டேருக்கு 150:50:50 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இட வேண்டும். 50 சதவீத தழைச்சத்தை நட்ட 30ஆவது நாளில் மேலுரமாக இட வேண்டும். ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் 75 கிலோ தழைச்சத்தை அடியுரமாக இடுவதன் மூலம் மகசூலை நிலை நிறுத்தலாம்.

  இடவேண்டிய தழை மணிசத்தின் அளவில் 75 சதவீதத்துடன் அசோஸ்பைரில்லம் (ஹெக்டேருக்கு 2 கிலோ), பால்போபாக்டீரியா (2 கிலோ) அல்லது அசோபாஸ் (4 கிலோ) கலந்து கலவையாக இடும்போது விளைச்சலை அதிகரிப்பதுடன் 25 சதவீத உர அளவு குறைகிறது.

நடவு: நன்கு நீர் பாய்ச்சிய பின் ஒரு வேர்கரணை அல்லது ஒரு தண்டக்கரணையை 50 ஷ் 50 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு நடவு செய்ய ஒரு ஹெக்டேருக்கு 40 ஆயிரம் கரணைகள் தேவைப்படுகின்றன.

கலப்புப் பயிராக 3 வரிகள் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லும், ஒரு வரி வேலி மசாலும் பயிர் செய்தால் ஊட்டச்சத்தை அதிகப்படுத்தலாம்.

நீர் மேலாண்மை: நட்ட 3ஆவது நாளில் உயிர் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்பு 10 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சுவது சிறந்தது. கழிவு நீரையும் பாசனத்துக்குப் பயன்படுத்தலாம்.

அறுவடை: நடவுக்கு பின்னர் 75 முதல் 80 நாள்களில் முதல் அறுவடையும், அதற்கடுத்து 45 நாளிலும் அறுவடை செய்யலாம். ஹெக்டேருக்கு 400 டன் தீவனம் கிடைக்கும். அதிகப்படியான தூர்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வெட்டி எடுத்து விட வேண்டும்.

  ஆக்சலேட் என்ற நச்சுபொருளின் தன்மையை குறைக்க இத்தீவனத்துடன் 5 கிலோ பயறுவகை தீவனத்தை கலந்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும். அல்லது சுண்ணாம்பு தண்ணீர் அல்லது தாது உப்பு கலவையை கால்நடைகளுக்கு அளிக்கலாம்.

  அரக்கோணத்தை அடுத்த சிறுனமல்லியைச் சேர்ந்த விவசாயி சுந்தரம் இந்த தீவனத்தை பயிரிட்டு மாடுகளுக்கு அளித்ததன் மூலம் நல்ல பலன் பெற்றுள்ளார். மேகந்திரவாடி கால்நடை மருத்துவர் கோபி அவருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அரசே இந்த தீவனப் பயிருக்கான புல்கரணைகளை இலவசமாக அளிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.