நகர்மன்றம் யோசிப்பதால் இலவச கலர் டி.வி.க்கள் விநியோகமில்லை
குடியாத்தம், ஜன. 10: குடியாத்தம் நகரில் உள்ள 6 வார்டுகளில் முழுமையாகவும், ஒரு சில வார்டுகளில் குறைந்த அளவிலும் இலவச கலர் டி.வி.க்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு டி.வி.க்களை பெற்றுத்தர அரசை அண
குடியாத்தம், ஜன. 10: குடியாத்தம் நகரில் உள்ள 6 வார்டுகளில் முழுமையாகவும், ஒரு சில வார்டுகளில் குறைந்த அளவிலும் இலவச கலர் டி.வி.க்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு டி.வி.க்களை பெற்றுத்தர அரசை அணுகினால் அரசியல் ரீதியான பிரச்னை ஏற்படுமோ என்று அதிமுக தலைமையிலான நகராட்சி நிர்வாகம் யோசித்து வருவதாக நகர மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் நடத்தும் மக்கள்:
Advertisement
இந்நகரில் உள்ள 36 வார்டுகளில் 9, 11, 18, 26, 27, 35 ஆகிய 6 வார்டுகளில் முழுமையாக இலவச கலர் டி.வி.க்கள் வழங்கப்படவில்லை. விடுபட்டுள்ள இந்த வார்டுகள் 5 அதிமுக, 1 காங்கிரஸ் உறுப்பினர்களைக் கொண்டது. அதிமுகவைச் சேர்ந்த நகர்மன்றத் தலைவரின் 35-வது வார்டில் கூட டி.வி.க்கள் வழங்கப்படவில்லை.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வார்டுகள் என்பதால், டி.வி.க்கள் வழங்கப்படவில்லை என்று அந்தந்த வார்டு மக்கள் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில், டி.வி. கிடைக்காத வார்டுகளைச் சேர்ந்தோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.
துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த நகர்மன்றம்:
இதையடுத்து, விடுபட்டோருக்கு டி.வி.க்கள் வழங்கக் கோரி, நகர்மன்றம் சார்பில் துண்டுப் பிரசுரங்கள் அண்மையில் விநியோகிக்கப்பட்டன.
இந்த பிரசுரங்களில், "பயனாளிகளை கணக்கெடுப்பு செய்வது மட்டுமே நகராட்சியின் பணி. அரசு ஒதுக்கீடு செய்து வார்டுகளுக்கு வரும் டி.வி.க்களுக்கு லாரி வாடகை, இறக்கு கூலி மற்ற இதர செலவுகள் நகரமன்ற உறுப்பினர்களைச் சார்ந்தது.
டி.வி.க்கள் வழங்கப்படாமல் இருப்பது மாவட்ட நிர்வாகத்தையும், வருவாய்த் துறையையும் சார்ந்தது. தமிழக அரசு இலவச வேட்டி, சேலை, பொங்கல் பொருள்களை ரேஷன் கடைகளில் வழங்குவதைப் போல டி.வி.க்களையும் அங்கேயே வழங்க வேண்டும். டி.வி கிடைக்காதவர்கள் வருவாய்த் துறையினரிடம் தொடர்பு கொள்ளவும் என அவர்களின் செல்போன் மற்றும் தொலைபேசி எண்களை குறிப்பிட்டுள்ளனர்.
10 லட்சத்தில் சேர்க்கப்படுமா?
இச்சூழலில் இலவச கலர் டி.வி.க்களைப் பெற்றுத் தர ஆளுங்கட்சியினரும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்று நகர மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கிடையில், இதுவரை வழங்கப்படாமல் உள்ள குடும்பத்தினருக்கு நடப்பாண்டில் 6-வது கட்டமாக 10 லட்சம் இலவச கலர் டி.வி.க்கள் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் குடியாத்தம் நகரில் விடுபட்டோருக்கு இலவச கலர் டி.வி.க்கள் பெற்றுத் தர ஆளும்கட்சியும், நகர்மன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.