சேதமடைந்துள்ள வந்தவாசி - ஆரணி சாலை சீரமைக்கப்படுமா?
வந்தவாசி, ஜன. 25: மிகவும் சேதமடைந்துள்ள வந்தவாசி-ஆரணி நெடுஞ்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சாலை சுமார் 40 கி.மீ. தூரம் கொண்டதாகும். இச்சாலை வழியாக வேலூர்,
வந்தவாசி, ஜன. 25: மிகவும் சேதமடைந்துள்ள வந்தவாசி-ஆரணி நெடுஞ்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சாலை சுமார் 40 கி.மீ. தூரம் கொண்டதாகும். இச்சாலை வழியாக வேலூர், குடியாத்தம், பெங்களூர், சித்தூர், மேல்மருவத்தூர், திண்டிவனம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் விழாக்களின்போது பெங்களூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஊர்களிலிருந்து நூற்றுக்கணக்கான தனியார் பஸ்கள் இச்சாலை வழியாக மேல்மருவத்தூருக்கு செல்லும்.
இச் சாலையில் அம்மையப்பட்டு, மும்முனி, தெள்ளூர், கீழ்க்கொவளைவேடு, மேல்நெமிலி, கிருஷ்ணாபுரம், நம்பேடு, ஆவணியாபுரம், அன்மருதை, திருமணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களும் வந்தவாசி அல்லது ஆரணிக்கு இச்சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.
வந்தவாசி மற்றும் ஆரணியில் அரசு மற்றும் பல்வேறு தனியார் கல்லூரிகள் இயங்குகின்றன. இந்த கல்லூரிகளை சேர்ந்த பல பஸ்களும் இச்சாலை வழியாக செல்கின்றன. இந்நிலையில் இச்சாலை பல இடங்களில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அண்மையில் பெய்த பலத்த மழையின்போது இச்சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இதனால் வந்தவாசியிலிருந்து ஆரணி செல்ல பயணநேரம் சுமார் 30 நிமிடங்கள் அதிகமாவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் சேதமடைந்த இச் சாலையில் இருச்சக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்குவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆகவே இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.