முகப்பு
வேலூர்

சாலை சேதமடைந்ததால் 5 மினி பஸ்கள் நிறுத்தம் அரசு டவுன் பஸ் கோரும் 15 கிராம மக்கள்

குடியாத்தம், ஜன. 28: குடியாத்தம் நகரிலிருந்து தாழையாத்தம், மேல்முட்டுகூர், கூடநகரம், அணங்காநல்லூர், சிங்கல்பாடி ஆகிய ஊராட்சிகளின் வழியாக அரசு பஸ் இயக்க வேண்டும் என அப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15 கிரா

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:39 AM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 9:48 PM

குடியாத்தம், ஜன. 28: குடியாத்தம் நகரிலிருந்து தாழையாத்தம், மேல்முட்டுகூர், கூடநகரம், அணங்காநல்லூர், சிங்கல்பாடி ஆகிய ஊராட்சிகளின் வழியாக அரசு பஸ் இயக்க வேண்டும் என அப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15 கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 அக்கிராமங்களின் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பழுதானதால் ஏற்கெனவே இயங்கி வந்த தனியார் மினி பஸ்களை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 குடியாத்தம் பஸ் நிலையத்தில் இருந்து தாழையாத்தம், அணங்காநல்லூர் வழியாக மாதனூருக்கு 2 மினி பஸ்களும், சிங்கல்பாடி ஊராட்சிக்கு 2 மினி பஸ்களும், கல்மடுகு வழியாக பரவக்கல் கிராமத்துக்கு ஒரு மினி பஸ்ஸýம், தட்டாங்குட்டை, பட்டு கிராமங்கள் வழியாக ஆலாம்பட்டறை கிராமத்துக்கு ஒரு மினி பஸ்ஸýம் என மொத்தம் 6 மினி பஸ்கள் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வந்தன.

Advertisement

 நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரிப்பால் மினி பஸ்களில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதால், இந்த வழித் தடங்களில் அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

வாகனங்கள் திருப்பிவிடப்பட்டதால் சாலை சேதம்!

 இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் குடியாத்தம்- மேல்பட்டி சாலையில் நகராட்சிக்குள்பட்ட சந்தப்பேட்டையிலிருந்து, செருவங்கி வரை ரூ. 43.80 லட்சம் மதிப்பில் 432 மீட்டர் நீளம் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

இதனால், குடியாத்தம் நகரிலிருந்து வளத்தூர், மாதனூர், ஒடுகத்தூர், மேல்பட்டி, ஆம்பூர் செல்லும் அனைத்து வாகனங்களும் தாழையாத்தம், மேல்முட்டுகூர் வழியாக சென்று வந்தன.

 சிமெண்ட் சாலை அமைக்கும் பணி 3 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்றது. அந்த நேரம் மழைக்காலம் என்பதால் தாழையாத்தம், மேல்முட்டுகூர் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்றவாறு பழுதடைந்தது.

5 மினி பஸ்கள் நிறுத்தம்!

 இதனால் இந்த வழித்தடத்தில் இயங்கி வந்த 6 மினி பஸ்களில், குடியாத்தம்-ஆலாம்பட்டறை வழித்தட பஸ் மட்டுமே தற்போது இயங்குவதாக அக்கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மற்ற மினி பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.

சாலை குண்டும், குழியுமாக பழுதாகி விட்டதால் தங்கள் பஸ்களை இயக்க முடியவில்லை என மற்ற மினி பஸ் உரிமையாளர்கள் கூறுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

 இதனால், மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களும், மாணவ, மாணவிகளும் குடியாத்தம் நகருக்கு சென்றுவர மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

"சாலை சேதமடைந்ததால் டவுன் பஸ் இயக்க சாத்தியமில்லை'

 இந்த வழித் தடத்தில் அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் தட்டாங்குட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் தா. கணேசன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அம்மனு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 அந்த சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால் அரசு டவுன் பஸ் இயக்க சாத்தியமில்லை என அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் கணேசனுக்கு பதில் அனுப்பியுள்ளார்.

 இதற்கிடையில், பழுதடைந்த சாலையை சீரமைத்து அரசு பஸ் இயக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் சார்பாக தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர் கே. முரளி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அரசு நடவடிக்கை எடுக்குமா என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.