பள்ளிகளில் காட்சிப் பொருளாக புரஜெக்டர்கள்!
அரக்கோணம், ஜூன் 26: தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள புரஜெக்டர்களை இயக்கி மாணவர்களுக்கு பயனுள்ள கல்வி நிகழ்ச்சிகளை காண்பிக்க கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றன
அரக்கோணம், ஜூன் 26: தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள புரஜெக்டர்களை இயக்கி மாணவர்களுக்கு பயனுள்ள கல்வி நிகழ்ச்சிகளை காண்பிக்க கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி நிகழ்ச்சிகளை காண்பிப்பதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் புரஜெக்டரை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இதன்படி, அரக்கோணம் வட்டாரத்தில் 14 நடுநிலைப் பள்ளிகளுக்கும், 7 தொடக்கப் பள்ளிகளுக்கும் இவை வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பள்ளிகளுக்கு வழங்கும்போது தமிழக அரசின் கல்வித் துறை பிறப்பித்துள்ள தனது உத்தரவில், "பள்ளியில் உள்ள ஒரு அறையில் புரஜெக்டர்களை நிரந்தரமாகப் பொருத்தி வைக்க வேண்டும். அத்துடன் இந்த புரஜெக்டர்கள் மூலம் ஒவ்வொரு வகுப்புக்கும் வாரந்தோறும் சிறந்த நிகழ்ச்சிகளை காண்பிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பல பள்ளியில் புரஜெக்டர்களுக்கான நிரந்தர அறை ஒதுக்கப்படவில்லையென்றும், புரஜெக்டர்கள் பயனற்று காட்சிப் பொருளாகவே கிடக்கின்றன என்றும் பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.
சிஏஎல் எனப்படும் கணினி வழிக் கற்பித்தலுக்காக கணினிகளை மட்டும் இயக்கிக் காண்பிக்கும் ஆசிரியர்கள் புரஜெக்டர்களை இயக்குவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சில பள்ளிகளில் மட்டும் மாணவர்களுக்கு புரஜெக்டர்களை இயக்கி, கல்வி நிகழ்ச்சிகள் காண்பிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டபோது, இதை இயக்கும்போது ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதை பழுது பார்க்க வேண்டிய பணத்தை நாங்களே செலவழிக்க வேண்டும். அதனால்தான் அதை பத்திரப்படுத்தி வைத்துள்ளோம். எங்களுக்குப் பிறகு, பொறுப்பேற்கும் தலைமை ஆசிரியரிடம் சரியான முறையில் ஒப்படைப்பதே சிறந்தது என்றனர்.
இதுதொடர்பாக கல்வித் துறை வட்டாரங்களிடம் கேட்டபோது, புரஜெக்டர்கள் பழுது ஏற்பட்டால் அதை வழங்கிய நிறுவனத்திடம் தகவல் தெரிவித்தால் சில நாள்களில் அந்நிறுவனப் பொறியாளர்கள் சீரமைத்துக் கொடுத்து விடுவர். ஆனால், புரஜெக்டர்கள் தவறி விழுந்து உடைந்தால் அதற்கு அந்நிறுவனம் சீரமைக்காது. பள்ளி நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றனர்.
எனவே, மாணவர்களின் நன்மைக்காக இப் புரஜெக்டர்களுக்காக பள்ளியில் தனி அறையை ஒதுக்கி கல்வி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, அவர்களை கல்வித் தரத்தில் முன்னேற்ற வைக்க கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.