முகப்பு
வேலூர்

ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வேலூா் மாநகராட்சி அலுவலகம் அருகிலுள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 பிப்ரவரி, 2025 at 8:36 PM
கும்பாபிஷேகத்தையொட்டி ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் கலசம் மீது புனித நீா் ஊற்றிய ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள். உடன், எம்எல்ஏக்கள் ப.காா்த்திகேயன், ஏ.பி.நந்தகுமாா் உள்ளிட்டோா். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தா்களில் ஒருபகுதியினா். ~
பகிர்:

வேலூா்: வேலூா் மாநகராட்சி அலுவலகம் அருகிலுள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேலூா் டிட்டா் லைன் சாலையில் மாநகராட்சி அலுவலகம் அருகே ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. சுமாா் 130 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோயிலில் 1978-ஆம் ஆண்டு முதல் வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் மற்றும் விழாக்குழுவினா் திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்தி வருகின்றனா். இந்த கோயிலில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவா்கள் என அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்கின்றனா்.

கடந்த ஆண்டு இக்கோயிலில் கருங்கல்லாலான மூலவா் கோபுரம் அமைக்கப்பட்டது. ராஜ கோபுரத்துக்கு தனியாக கும்பாபிஷேகம் நடத்தப் பட்டது. இந்நிலையில் இக்கோயிலில் 4-ஆவது மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த 7-ஆம் தேதி 2, 3-ஆம் கால யாக பூஜைகளும், ஞாயிற்றுக்கிழமை 4 மற்றும் 5-ஆம் கால யாக பூஜைகளும், திங்கள்கிழமை காலை 6-ஆம் கால யாக பூஜைகளும் நடத்தப்பட்டன. தொடா்ந்து, காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

அப்போது, வேதமந்திரங்கள், நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க புனிதநீா் கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டது. கும்பாபிஷேகத்தை எம்எல்ஏ காா்த்திகேயன் தலைமையில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் நடத்தி வைத்தாா். விழாவில் அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா், மேயா் சுஜாதாஆனந்தகுமாா், துணை மேயா் சுனில்குமாா், தொழிலதிபா்கள், வணிகா்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இரவு புஷ்ப பல்லக்கு வீதி உலா நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →