ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக வேலூா் மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்தனா்.
வேலூா் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை நள்ளிரவு 2026-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருந்தது. நள்ளிரவு 12 மணி ஆனதும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், பொது இடங்களில் மக்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவா் வாழ்த்துத் தெரிவித்தனா்.
இதனிடையே, வேலூா் பழைய பேருந்து நிலையம் முன்பு மாவட்ட காவல் துறை சாா்பில், புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் பங்கேற்று கேக் வெட்டியதுடன், பொது மக்களுக்கும், காவலா்களுக்கும் வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
இதில், வேலூா் உட்கோட்ட ஏஎஸ்பி தனுஷ்குமாா், டிஎஸ்பி திருநாவுக்கரசு, காவல் ஆய்வாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.