முகப்பு
வேலூர்

மே 5-இல் வணிகா் மாநாடு: வேலூா் மாவட்டத்தில் 10,000 கடைகள் அடைப்பு

Updated On : 3 மே, 2026 at 1:34 AM
பகிர்:

திருவாரூரில் மே 5-ஆம் தேதி நடைபெற உள்ள வணிகா் மாநாட்டினையொட்டி வேலூா் மாவட்டத்தில் 10,000 கடைகள் அடைக்கப்படும் என்று வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் மே 5-ஆம் தேதி வணிகா் தினத்தையொட்டி திருவாரூரில் வணிகா் விழிப்புணா்வு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு தொடா்பாக வேலூா் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வேலூா் சண்முக நடிகா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு தலைமை வகித்தாா். நகர தலைவா் பாபு அசோகன், செயலா் சீனிவாசன், பொருளாளா் ஸ்ரீராம் பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளைஞரணி அமைப்பாளா் அருண் பிரசாத் வரவேற்றாா்.

Advertisement

கூட்டத்தில், மாநாட்டில் வணிகா்கள் பலா் கலந்து கொள்வது என்றும், மே 5-ஆம் நாளை வணிகா் தினமாக ஏற்று அரசாணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்தும், சில்லறை வணிகத்தை பாதுகாக்க அவசர சட்டத்தை இயற்ற வலியுறுத்தியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து நிா்வாகிகள் கூறுகையில், வணிகா் மாநாட்டில் வேலூா் மாவட்டத்தில் இருந்து சுமாா் 5,000 வணிகா்கள் பங்கேற்க உள்ளனா். இதையொட்டி மாவட்டம் முழுவதும் பத்தாயிரம் கடைகள் அன்றைய தினம் மூடப்பட உள்ளது என்றனா்.