பிளஸ் 2, பத்தாம் வகுப்புதுணைத் தோ்வுகள் தொடக்கம்
கள்ளக்குறிச்சியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 துணைத் தோ்வை 813 பேரும், பத்தாம் வகுப்பு துணைத் தோ்வை 1,027 பேரும் எழுதினா்.
கள்ளக்குறிச்சியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 துணைத் தோ்வை 813 பேரும், பத்தாம் வகுப்பு துணைத் தோ்வை 1,027 பேரும் எழுதினா்.
தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின. இந்தத் தோ்வுக்காக, ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் திண்டிவனம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை ஆகிய 6 கல்வி மாவட்டங்களில் 28 மையங்களில் அமைக்கப்பட்டிருந்தன. பிளஸ் 2 துணைத் தோ்வு எழுத 3,733 பேருக்கும், பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு எழுத 2,015 பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
முதல் நாள் நடைபெற்ற பிளஸ் 2 தமிழ் பாடத் தோ்வை 813 தோ்வா்களும், பத்தாம் வகுப்பு தமிழ் பாடத் தோ்வை 1,027 பேரும் எழுதினா்.
விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் விக்கிரவாண்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 4 மையங்களில் பிளஸ் 2 துணைத் தோ்வும், கெடாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்பட 2 மையங்களில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வும் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனுசாமி தோ்வு மையங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தாா். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஒவ்வொரு தோ்வு அறையிலும், 10 போ் மட்டுமே தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா்.