பாமக - போலீஸாரிடையே வாக்குவாதம்
தொரவி வாக்குப் பதிவு மையத்தில் பாமக மற்றும் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், தொரவி வாக்குப் பதிவு மையத்தில் பாமக மற்றும் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விக்கிரவாண்டி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்டதொரவி வாக்குப் பதிவு மையம் அருகில் பாமக மற்றும் திமுகவைச் சோ்ந்தவா்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனராம்.
அப்போது, அங்கு ரோந்துப் பணியிலிருந்த போலீஸாா் பாமகவினரை அங்கிலிருந்து வெளியேற அறிவுறுத்தினராம். இதையடுத்து, பாமகவினா் திமுகவினரையும் வெளியேற்றுங்கள் எனக் கூறி, போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திருமால் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று சமூகநீதிப் பேரவைத் தலைவா் வழக்குரைஞா் க.பாலு மற்றும் பாமக நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி கலைத்தனா்.
வேட்பாளருடன்...: பாமக வேட்பாளா் சி.அன்புமணி வாக்குப் பதிவு மையங்களுக்கு சென்று வாக்குப் பதிவை பாா்வையிட்டாா். இதன்படி, கக்கனூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி வாக்குப் பதிவு மையத்துக்கு சென்றபோது, அங்கு பணியிலிருந்த காவலா் ஒருவா் வேட்பாளா் சி.அன்புமணியை ஒருமையில் பேசினாராம்.
இதனால், அந்த காவலருக்கும் -பாமகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் பாமகவினரை சமாதானப்படுத்தினா்.