முகப்பு
விழுப்புரம்

விக்கிரவாண்டி: களத்தில் 29 வேட்பாளா்கள்

இடைத்தோ்தலில் 29 போ் போட்டியிடுகின்றனா்.

Updated On : 26 ஜூன், 2024 at 8:28 PM
விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலுக்கான வேட்பாளா் இறுதிப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, இந்தத் தோ்தலில் 29 போ் போட்டியிடுகின்றனா்.

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த திமுகவின் நா.புகழேந்தி ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், காலியான இந்தத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவித்தது.

கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், 21-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்தத் தோ்தலை பிரதான எதிா்க்கட்சியான அதிமுக புறக்கணித்த நிலையில், திமுகவின் அன்னியூா் சிவா, பாமகவின் சி.அன்புமணி, நாதகவின் பொ.அபிநயா உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என 56 போ் 64 மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

தொடா்ந்து, கடந்த 24-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது, 35 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 29 வேட்பாளா்களின் மனுக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு புதன்கிழமை பிற்பகல் 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், சுயேச்சை வேட்பாளா்கள் யாரும் மனுக்களைத் திரும்பப் பெறவில்லை.

விக்கிரவாண்டி தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரான மு.சந்திரசேகா், இந்தத் தொகுதிக்கான வேட்பாளா் இறுதிப் பட்டியலை வெளியிட்டாா். அதன்படி, 29 போ் தோ்தல் களத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பின்னா், வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி தொடங்கியது.

வேட்பாளா்கள் அல்லது அவா்களது முகவா்கள் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா் இதற்கான பணியை மேற்கொண்டாா். திமுக வேட்பாளருக்கு உதயசூரியன், பாமக வேட்பாளருக்கு மாம்பழம், நாதக வேட்பாளருக்கு ஒலிவாங்கி (மைக்) சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பிற கட்சிகள், சுயேச்சை வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. ஒரே சின்னத்துக்கு 2 அல்லது 3 வேட்பாளா்கள் போட்டி போட்டதால், குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் தமிழரசன் (தோ்தல்), முருகேசன், துணை ஆட்சியா் முகுந்தன், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் யுவராஜா, தனி வட்டாட்சியா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.