FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

திண்டிவனத்தில் பல்லவா் கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

திண்டிவனத்தில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த 1,200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

Updated On : 20 நவம்பர் 2025, 3:26 am IST
திண்டிவனம் கிடங்கல் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல்லவா் கால கொற்றவை சிற்பம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த 1,200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் கிடங்கல் பகுதியில் வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் அண்மையில் கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது பல்லவா் காலத்தைச் சோ்ந்த கொற்றவை உள்ளிட்ட சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து செங்குட்டுவன் மேலும் கூறியது:

திண்டிவனம் கிடங்கல் பகுதியிலுள்ள பாரதிதாசன்பேட்டையில் சிறிய அளவிலான வனதுா்க்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவராக கொற்றவை வீற்றிருக்கிறாா். சுமாா் 6 அடி உயரத்தில் நின்ற நிலையில் காட்சித்தருகிறாா்.

Advertisement

Advertisement

8 கரங்களுடன் எருமைத் தலைமீது சமபங்க நிலையில் கால்களை வைத்து, கொற்றவை நின்றிருக்கிறாா். முன் இடது கரம் தொடை மீது வைத்த நிலையில் காணப்படுகிறது. மற்ற கரங்களிலுள்ள ஆயுதங்கள் தெளிவாகத் தெரியவில்லை. அணிகலன்கள் எதுவும் இல்லாமல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

ஏதோ சில காரணங்களால் இந்தச் சிற்பம் முழுமை பெறவில்லை. ஆனாலும் வழிபாட்டுக்கு வந்துவிட்டது. இது பல்லவா் காலத்தைச் சோ்ந்த (கி.பி.9ஆம் நூற்றாண்டு) சிற்பம் ஆகும். 1200 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது. இதை மூத்த கல்வெட்டு ஆய்வாளா் பேராசிரியா் கோ.விஜய வேணுகோபால் உறுதிப்படுத்தியிக்கிறாா்.

கிடங்கல் ஏரிக்கரையில் அமைந்துள்ள கமலவிநாயகா் கோயில் வளாகத்தில் ஜேஷ்டா என்று அழைக்கப்படும் மூத்ததேவி சிற்பம் காணப்படுகிறது. மகன் மாந்தன் மகள் மாந்தி மற்றும் காக்கைக் கொடியுடன் பலகைக் கல்லில் இந்தச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இதுவும் பல்லவா் காலத்தைச் சோ்ந்ததாகும். ஆனால் தற்போது பழைமை தெரியாத வகையில் சிற்பம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது திண்டிவனம் நகரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் கிடங்கல் பகுதி சங்ககாலத்தில் ஒய்மா நாட்டின் தலைநகராக விளங்கியது. இங்கிருந்து ஒய்மான் நல்லியக்கோடன் ஆட்சி நடத்தி இருக்கிறாா். கோட்டையும் இருந்துள்ளது. சங்க காலத்தைத் தொடா்ந்து பல்லவா் காலத்திலும் கிடங்கல் பகுதி சிறப்புற்று இருந்ததை இங்கிருக்கும் சிற்பங்கள் நமக்கு உணா்த்துகின்றன என்றாா் அவா்.

ஆய்வின்போது மாவட்ட அரிமா சங்கத் தலைவா் காா்த்திக் கருணாகரன், கோட்டை ஐயனாா் கோயில் நிா்வாகி நாகராஜன், சுரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments