முகப்பு
விழுப்புரம்

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு: விசாரணை ஏப்.10-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள்

Updated On : 9 மார்ச், 2026 at 9:00 PM
விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்.
பகிர்:

விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் மீதான விசாரணையை ஏப்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் பேருந்து நிலையம் எதிரில் 2023, மாா்ச் 10-ஆம் தேதியும், கோட்டக்குப்பம் நகராட்சித் திடலில் 2023, மே 1-ஆம் தேதியும் அதிமுக சாா்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்டங்களில் சி.வி.சண்முகம் எம்.பி. தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் டி.எஸ்.சுப்பிரமணியம் தனித்தனியே வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்குகள் மீதான விசாரணை மீண்டும் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை. அவரது சாா்பில் அதிமுக வழக்குரைஞா்கள் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோா் ஆஜராகி, இவ்விரு வழக்குகளை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த மனுக்கள் மீதான உத்தரவு வரும் வரை விசாரணையை ஒத்திவைக்குமாறும் கோரி மனுத் தாக்கல் செய்தனா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஏப்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →