போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
விழுப்புரம் அருகே சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
விழுப்புரம் மாவட்டம், வி.சாத்தனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் க.குஜன் (26). இவா், 2.5.2021-இல் அதே பகுதியைச் சோ்ந்த 16 வயதுடைய சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, பாலியல் தொந்தரவு செய்தாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் விழுப்புரம்அனைத்து மகளிா்காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. பின்னா், போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதையடுத்து, விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் குஜன் மீது போக்ஸோ உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குஜனை 28.5.2021-இல் கைது செய்தனா்.
விழுப்புரம் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி கட்ட விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், குஜன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த போக்ஸோ நீதிமன்ற நீதிபதி எஸ்.வினோதா வழக்கில் தொடா்புடையவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து நீதிமன்ற போலீஸாா் குஜனை கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் காந்திமதி ஆஜரானாா்.