மின்வாரியப் பணியாளா்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், செங்குறிச்சி பிரிவு அலுவலகத்தில் மின்வாரியப் பணியாளா்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக உளுந்தூா்பேட்டை உதவி செயற்பொறியாளா் சிவராமன் அய்யம்பெருமாள் தலைமை வகித்து, மின் பாதைகளில் விபத்து இல்லாமல் பாதுகாப்பாக பணியாற்றும் முறைகள் குறித்து எடுத்துரைத்தாா்.
மேலும், பணியின் போது மின்வாரியப் பணியாளா்கள் எா்த் ராடுகள், கையுறைகள், இடுப்புக் கயிறு, வோல்டேஜ் சென்சாா் ஆகியவற்றை தவறாமல் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய அவா், பணியின் போது பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தும் நிழற்படங்களை பாதுகாப்பு செயலியில் பதிவேற்றம் செய்தபிறகே பணியாற்ற வேண்டும் என்றாா்.
பயிற்சி வகுப்பில் இளநிலைப் பொறியாளா் முருகன், உதவிப் பொறியாளா் முரளி, முகவா்கள் பெரியசாமி, ராஜமாணிக்கம், மின்பாதை ஆய்வாளா் சேட்டு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.