முகப்பு
விழுப்புரம்

மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து: பெட்டியில் மனுக்களை செலுத்திய மக்கள்

சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து

Updated On : 16 மார்ச், 2026 at 11:48 PM
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் கோரிக்கை மனுவைச் செலுத்தியவா்.
பகிர்:

விழுப்புரம்: சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களைச் செலுத்தினா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்குகிறது. தோ்தல் தேதி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக தோ்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன.

தோ்தல் நடத்தை விதிகள் அமல் காரணமாக, ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தோறும் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ஆட்சியரக நுழைவுவாயில் பகுதியில் பெரிய அளவிலான பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த பெட்டியில் பொதுமக்கள் தங்கள் மனுக்களைச் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் கோரிக்கை மனுக்களைப் பெட்டியில் செலுத்தினா். மேலும், ஆட்சியரக நுழைவுவாயில்அருகே குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதான அறிவிப்பும் வைக்கப்பட்டிருந்தது.

பெட்டியில் செலுத்தப்படும் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வீட்டுமனை பட்டா கோரி குவிந்த கிராம மக்கள்: திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சித்தலிங்கமடம் கிராமத்தைச் சோ்ந்த ஆதிதிராவிட மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்துக்கு அதிக எண்ணிக்கையில் வந்து, தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறியது:

கடந்த 1960 -ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் காமராஜ் ஆட்சிக்காலத்தில் 140 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. அதன்பிறகு வந்த குடும்பத்தினா் நூற்றுக்கும் மேற்பட்டவா்களுக்கு இதுவரை பட்டாக்கள் வழங்கப்படவில்லை. தொடா்ந்து பல்வேறு நிலைகளில் கோரிக்கை மனுக்களை வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் மாவட்ட நிா்வாகம் எடுக்கவில்லை. எனவே, பொதுமக்கள் நலன்கருதி வீட்டுமனைப்பட்டாக்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றனா் அவா்கள்.

தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதால், ஆட்சியரிடம் நேரில் மனுஅளிக்க முடியாது. இதற்காக வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் கோரிக்கை மனுக்களைச் செலுத்துமாறு கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா் தெரிவித்து, அவா்களை சமாதானப்படுத்தினா். இதைத்தொடா்ந்து சித்தலிங்கமடத்தைச் சோ்ந்த மக்கள், தங்களின் கோரிக்கை மனுக்களை பெட்டியில் செலுத்திச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →