ஊர்வலக் குடைகள் தயாரிக்கும் பணிக்கு அரசின் உதவி கிடைக்குமா
விருத்தாசலம் அருகே கர்ணத்தம் கிராமத்தில் குடை செய்வதை பரம்பரைத் தொழிலாக செய்து வருகின்றனர். குடை செய்வதற்கு அரசு மானியம் வழங்குமா? என பல ஆண்டுகளாக எதிர்பார்த்து வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே கர்ணத்தம் கிராமத்தில் குடை செய்வதை பரம்பரைத் தொழிலாக செய்து வருகின்றனர். குடை செய்வதற்கு அரசு மானியம் வழங்குமா? என பல ஆண்டுகளாக எதிர்பார்த்து வருகின்றனர்.
கர்ணத்தம் கிராமத்தைச் சேர்ந்த தேவகி குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக கோயில் குடை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர்.
பல்வேறு சிறுதொழில்களுக்கு அரசு மானியம் வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு உதவி செய்து வருகிறது. இதேபோல், கோயில் குடை செய்யும் தேவகி குடும்பத்துக்கு அரசின் மானியம் கிடைக்க அரசு வழிவகை செய்யுமா? என்பதே அவரது எதிர்பார்ப்பாகும்.
Advertisement
Advertisement
இது குறித்து தேவகி தெரிவித்தது: "விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதியில் நாங்கள் மட்டுமே சாமி குடைகள் செய்து வருகிறோம். இது எங்கள் பரம்பரைத் தொழிலாகும். மூங்கில் பட்டைகள், ஜரிகை, நூல், விலை உயர்ந்த வெல்வெட்டு துணிகள் போன்றவைகளின் மூலம் குடைகளை செய்கிறோம். குடையின் அளவைப் பொறுத்து பல்வேறு விலைகளில் குடைகளை செய்து தருகிறோம்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் எங்களிடம் குடைகளை வாங்கிச் செல்கின்றனர்.
இருப்பினும் எங்களுக்கு போதுமான கூலி கிடைப்பதில்லை. நூல், ஜரிகை, உயர்ரக துணிகள் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், ஒரு குடை செய்வதற்கு 7 நாள்களுக்கு மேல் தேவைப்படுவதால் ஆள் கூலிக் கூட எங்களுக்கு கிடைப்பதில்லை.
போதிய லாபம் இல்லையென்றாலும் பரம்பரைத் தொழில் என்பதால் இந்தத் தொழிலை செய்து வருகிறோம். பலமுறை மானியத்துக்காக வங்கிகளை அணுகியும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
போதுமான வருமானம் இல்லாததாலும், வேலைக்கு ஆட்கள் கிடைக்காததாலும் இனி குடை செய்ய முடியுமா? என்ற அச்சம் உள்ளது. பல்வேறு தொழில்களுக்கு அரசு மானியம் வழங்குவது போன்று குடை தயாரிப்பதற்கும் அரசின் உதவி கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும்' எனத் தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாகமும், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளும் அரசின் மானியம் கிடைக்க உதவி செய்வார்களா? என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும்.