காசோலை மோசடி வழக்கு: என்எல்சி ஊழியருக்கு ஓராண்டு சிறை
காசோலை மோசடி வழக்கில் என்எல்சி ஊழியருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நெய்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
காசோலை மோசடி வழக்கில் என்எல்சி ஊழியருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நெய்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
நெய்வேலி, 17-ஆவது வட்டத்தைச் சேர்ந்தவர் பத்ரிநாத்(50). என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதலாவது சுரங்க விரிவாக்கத்தில் துணை முதன்மை பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரிடம், முதலாவது சுரங்கத்தில் ஸ்டோர் கீப்பராகப் பணியாற்றி வரும் 25-ஆவது வட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ரூ.2 லட்சம் கடனாகப் பெற்றுக்கொண்டு, அதற்கு மாற்றாக ரூ.2 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.
குறிப்பிட்ட நாளில் வங்கியில் செலுத்தப்பட்ட காசோலை பணம் இல்லாமல் திரும்பியது. இதுகுறித்து பத்ரிநாத் பலமுறை நேரில் சென்று கேட்டும் பணம் தராமல் ரவிச்சந்திரன் காலம் தாழ்த்தி வந்தாராம். இதையடுத்து பத்ரிநாத் நெய்வேலி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கவியரசன், ரவிச்சந்திரனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், காசோலைத் தொகை ரூ.2 லட்சத்தைத் திருப்பி தரும்படியும் தீர்ப்பளித்தார்.