கடலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 148 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று எஸ்.பி. தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்கும் வகையில் கடந்த 16-ஆம் தேதி 4 தனிப்படைகளை அமைத்து காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் உத்தரவிட்டார்.
மாவட்டத்திலுள்ள 7 உள்கோட்டங்களிலும் இயங்கும் வகையில் 4 காவல் ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள், தலா 10 காவலர்கள் இப்படையில் இடம் பெற்றனர். இவர்கள் மணல் கடத்தல் நடைபெறும் பகுதிகளைக் கண்டறிந்து தீவிர தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்படி மாவட்டத்தில் இதுவரை 148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அனுமதியின்றி நீர்நிலைகளில் மணல் அள்ளியதாக 11 லாரிகள், 4 டிராக்டர், மினிலாரி 3, மணல் அள்ளும் இயந்திரம் 1 மற்றும் 129 டயர் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனால், தற்போது மாவட்டத்தில் மணல் கடத்தல் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. எனினும், தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.