மரத்தில் கார் மோதியதில் 7 பேர் சாவு
கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே புதன்கிழமை அதிகாலை மரத்தின் மீது கார் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே புதன்கிழமை அதிகாலை மரத்தின் மீது கார் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (34). இவர் சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே டெக்னீஷியனாக பணியாற்றி வந்தார். வில்லிவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கேரளத்தில் நடைபெற இருந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க பிரகாஷ், தனது மனைவி பிரியா (32), உறவினர்கள் பிரீத்தி, பிரதாப், பிரின்ஸ் ஜோஷ் (22), குட்டி, மிதுன் ஆகியோருடன் வாடகை காரில் சென்னையில் இருந்து புறப்பட்டார். காரை ஓட்டுநர் சிவா ஓட்டினார்.
கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே புதன்கிழமை அதிகாலை சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது.
காரின் இடிபாடுகளில் சிக்கி பிரகாஷ், பிரியா, பிரீத்தி, பிரதாப், குட்டி, மிதுன், சிவா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த பிரின்ஸ் ஜோஷ் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து குறித்து ராமநத்தம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.