முகப்பு
இந்தியா

இந்தியா வந்த முதல் எண்ணெய்க் கப்பல்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்தது எப்படி?

மும்பை வந்தடைந்த முதல் எண்ணெய்க் கப்பல் பற்றி...

Updated On : 12 மார்ச், 2026 at 8:01 AM
கோப்புப்படம்
பகிர்:

ஈரான் போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக செளதி அரேபியாவில் இருந்து மும்பை துறைமுகத்துக்கு எண்ணெய்க் கப்பல் வந்தடைந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும், தடையை மீறிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், இந்திய கேப்டன் தலைமையிலான குழு இயக்கிய லைபீரிய நாட்டுக் கொடி கொண்ட எண்ணெய்க் கப்பல் மும்பை துறைமுகத்துக்கு இன்று வந்தடைந்தது.

செளதி அரேபியாவின் ராஸ் தனுரா துறைமுகத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி ஷென்லாங் சூயஸ்மாக்ஸ் என்ற சரக்கு கப்பல் கச்சா எண்ணெய்யை ஏற்றியுள்ளது. இரண்டு நாள்களுக்குப் பின்னர் மும்பை நோக்கிப் பயணத்தை தொடங்கியுள்ளது.

இந்த கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக பாதுகாப்பாக கடந்து புதன்கிழமை மும்பை துறைமுகத்துக்கு வந்துசேர்ந்துள்ளது.

இந்த கப்பலில் 1,35,335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் வந்துள்ளது. கிழக்கு மும்பை, மஹுலில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லப்படவுள்ளன. கேப்டன் சுக்ஷாந்த் சிங் சந்து தலைமையில் 29 இந்திய, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த மலுமிகள் வந்துள்ளனர்.

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல் மிகுந்த ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும்போது, கப்பலின் சமிக்ஞை, டிரான்ஸ்பாண்டர்கள் போன்ற தொழில்நுட்ப சாதனங்களை கப்பல் பணியாளர்கள் அணைத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 8 ஆம் தேதி அணைக்கப்பட்ட ரேடார் உள்ளிட்ட கருவிகள், ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்த பிறகு, மார்ச் 10 ஆம் தேதிதான் மீண்டும் ஆன் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, கடந்த மார்ச் 10, செவ்வாய்க்கிழமை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேசியதை தொடர்ந்து, புஷ்பக் மற்றும் பரிமல் ஆகிய இந்திய எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் அனுமதித்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால், இந்த செய்தி உண்மையல்ல என்று என்டிடிவி செய்தி நிறுவனத்துக்கு ஈரான் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

முன்னதாக, துபையிலிருந்து குஜராத் துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்த தாய்லாந்து எண்ணெய்க் கப்பல் மற்றும் பிரிட்டன், ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில், 2 இந்திய மலுமிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

The first oil tanker to arrive in India after the Iran war!

முழு கட்டுரையைப் படிக்க →