ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு
சர்வதேச கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவுறுத்தல் பற்றி...
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்துவதை நிறுத்துமாறு கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் தொடங்கியதில் இருந்து ஹோர்முஸ் நீரிணைப் பாதை முடங்கியுள்ளது. அவ்வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களை ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்கி வருகின்றது.
இந்த நிலையில், ஓமனுக்கு அருகே ஹோர்முஸ் நீரிணையில் சென்ற ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) சரக்குக் கப்பல் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும், 10 இந்தியர்கள் பலத்த காயமடைந்தனர்.
Advertisement
Advertisement
இந்த தாக்குதலுக்கு மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கும் நிலையில், தில்லியில் உள்ள ஈரான் தூதரக அதிகாரிகளை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், சர்வதேச கப்பல்களில் பணியாற்றும் இந்தியப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
முதல்கட்டமாக, மறுஉத்தரவு வரும் வரை ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்தியப் பணியாளர்களை பணியமர்த்தக் கூடாது என்று கப்பல் உரிமையாளர்கள், கப்பல் மேலாளர்கள் மற்றும் ஆள்சேர்ப்பு முகமைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியக் கப்பல் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், பாரசீக வளைகுடா, ஹார்முஸ் நீரிணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் கப்பல்களின் கேப்டன்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், உடனடி உதவி தேவைப்படும் கப்பல் பணியாளர்கள் மற்றும் கப்பல்கள் கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்தின் தகவல் தொடர்பு மையம் அல்லது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான இந்தியக் கடற்படையின் தகவல் ஒருங்கிணைப்பு மையத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா போர் மீண்டும் தீவிரமடைந்திருப்பதால், மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்த அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.
Indian seafarers should not be employed on ships traversing the Strait of Hormuz: Central Government.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.