கடலூர் மத்திய சிறையிலிருந்த கைதி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் குயிலம்பாளையத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் ஏழுமலை என்ற மைக்கேல் (36). இவர், கொலைமுயற்சி வழக்கில் ஆரோவில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக் கைதியாக கடலூர் மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மைக்கேல் மீது, விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுவை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.