ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்த விவசாயி சாவு
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டுத் தரக் கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தின் போது
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டுத் தரக் கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தின் போது விஷம் குடித்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
பண்ருட்டி அருகே உள்ள கணிசப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (59). விவசாயி. இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், அவரது 87 சென்ட் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், செல்வம், ராஜேந்திரன், சங்கர் ஆகியோர் அபகரித்து அதில், தற்போது மிளகாய், கரும்பு சாகுபடி செய்துள்ளனராம்.
நிலத்தை மீட்டுத் தரக் கோரி, கடந்த ஓராண்டு காலமாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து மனு அளித்த நிலையில், அங்கு நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணும்படி தெரிவித்து விட்டனராம்.
அதன்படி, நீதிமன்றத்தின் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், சரவணன், செல்வம் உள்ளிட்ட 4 பேர் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று மிரட்டியதுடன், விவசாய நிலத்தைச் செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காக விட்டு விடுவோம் என அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்துக்கு மனு அளிக்க வந்த கிருஷ்ணமூர்த்தி, ஆட்சியரிடம் மனுவை அளித்துவிட்டு, வெளியே வந்து விஷம் குடித்துவிட்டாராம். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கடலூர் அரசுப் பொது மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்தார்.
இதுதொடர்பாக கடலூர் புதுநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.